கோரக்பூர்: 3 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் பெண் ஒருவர், ஒரே வீட்டில் கணவரும், தகாத உறவு காதலனும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி,மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். உத்தரபிரேச மாநிலம் கோரக்பூர் அடுத்த பிப்ரைச் பகுதியை சேர்ந்த சுமன் தேவி (34) – ராம் கோவிந்த் (35) தம்பதி, மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தனர். சுமன் ேதவிக்கு வேறொரு ஆணுடன் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இவ்விசயம் ராம் கோவிந்த்திற்கு தெரியவந்தது.
இதனால் தம்பதிக்குள் அடிக்கடி குடும்பச் சண்டை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தனது கள்ளக்காதலனை, இதே வீட்டில் ஒன்றாக இருக்க அனுமதிக்க வேண்டும் என்று தனது கணவரிடம் வலியுறுத்தினார். அதற்கு கணவன் சம்மதிக்கவில்லை. வீட்டிலிருந்தும் வெளியேறிவிட்டார். இதனால் கடுப்பான சுமன் தேவி, அப்பகுதியில் இருந்த மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவலறிந்த மின்வாரிய ஊழியர்களும், போலீசாரும் மின் கம்பத்தின் மீதிருந்த சுமன் தேவியை, அங்கிருந்து கீழே இறங்க வலியுறுத்தினர். இதற்கிடையே மின்வாரிய ஊழியர்கள், அந்த மின்கம்பத்தின் வழியாக செல்லும் மின்சாரத்தை துண்டித்தனர்.
பல மணி நேர போராட்டத்திற்கு பின், ஒருவழியாக அந்தப் பெண் கீழே இறங்கினார். இதுகுறித்து பிப்ரைச் போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘மின்வாரிய ஊழியர்களின் உதவியோடு அந்தப் பெண்ணை கீழே இறக்கிவிட்டோம். அவரிடம் விசாரித்ததில், தனது கணவர் இருக்கும் வீட்டில், தனது கள்ளக்காதலனையும் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு அந்தப் பெண்ணின் கணவரும் அங்கு வந்தார். இருவருரையும் சமாதானப்படுத்தி கணவருடன் அந்தப் பெண்ணை அனுப்பி வைத்தோம்’ என்றனர். ஒரே வீட்டில் கணவரும், கள்ளக்காதலனும் இருக்க வேண்டும் என்று கூறி, தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்திலும் வைரலாகிறது.