பெண் டாக்டர் பலாத்கார கொலை விவகாரம்; முதல்வர் மம்தாவுடன் பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்: போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் கடிதம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜிகர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மாநில அரசுக்கு எதிராக ஒரு மாதத்துக்கும் மேலாக ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். ஆர்ஜிகர் மருத்துவமனை நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து விவாதிப்பதற்கு நேரம் கேட்டு மருத்துவர்கள் சார்பில் முதல்வருக்கு இமெயில் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில், முதல்வரின் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பொதுவெளியில் அவரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யலாம் என்றும் முதல்வருடனான முழுவிவாதமும் நேரலையாக ஒளிபரப்பப்பட வேண்டுமென்றும் மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர். நேற்று அதிகாலை 3.50மணிக்கு இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் நேற்று மாலை வரை அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மருத்துவர்களுடன் பேசுவதற்கு அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் மனோஜ் பான்ட் அழைப்பு விடுத்தார். பேச்சுவார்த்தையில் முதல்வர் மம்தா பங்கேற்பாரா? இல்லையா? என்பது குறிப்பிடப்படவில்லை. மேலும் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை அளிப்பார்கள் என அரசு நம்புவதாகவும் தெரிவித்து இருந்தார். அரசின் பேச்சுவார்த்தைக்கு முன் மருத்துவர்கள் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள், “அரசின் அழைப்பை ஏற்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கு முன் பல விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் 30 பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும். முதல்வர் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவேண்டும். பேச்சுவார்த்தைக்கு பின் திரும்பி வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் ஆலோசனை செய்து பின்னர் தான் முடிவை அறிவிப்போம்” என்று தெரிவிததுள்ளனர்.

Related posts

ஏரியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்!

லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி; 2,700-க்கும் மேற்பட்டோர் காயம்!

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் புதுவையில் நாளை பந்த்