இதே போல் பெரியார் சிலையை உடைப்பேன் என்று டிவிட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் தன்மீது பதிவான 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணக்கு வந்தது. அப்போது, எச்.ராஜா தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜராகி, குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால் எச்.ராஜா மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்துமீரான் ஆஜராகி, எச்.ராஜாவின் பேச்சு தனிப்பட்ட நபர்களை மட்டுமல்லாமல், அனைவரையும் பாதிக்க கூடிய வகையில் உள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பேசி உள்ளதால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்கு தொடர முடியும். எனவே இந்த வழக்குகளை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வாறு எச்.ராஜா பேசுவது முதல் முறை அல்ல. இதுபோல் கருத்துகளை கூறக்கூடாது. பெண்களை குறி வைத்து குற்றச்சாட்டுகளை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. வெறுப்புணர்வு பேச்சுக்களுக்கு எதிராக உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்று தெரிவித்து இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.