பாட்டு கற்றுக்கொள்ள வந்த இளம்பெண்ணை மிரட்டி 5 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பாதிரியார் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி: சர்ச்சுக்கு பாட்டு கற்றுக்கொள்ள வந்த இளம்பெண்ணை 5 ஆண்டுகளாக கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூர் பக்கம் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர், தங்களது கிராமத்தின் அருகே உள்ள சர்ச்சுக்கு பாட்டு கற்றுக்கொள்வதற்காக கடந்த 2018ம் ஆண்டு சென்றுள்ளார். அப்போது அந்த சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்த வேலூர் மாவட்டம் எழில் நகர் பெரிய அல்லாபுரம் காந்தி தெருவை சேர்ந்த சேகர் மகன் வினோத் ஜோஸ்வா (40) என்பவர் அந்த இளம்பெண்ணை ஏமாற்றி கட்டாய பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதுபற்றி யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டி உள்ளார். இதனால் உயிருக்கு பயந்த அந்த இளம்பெண் புகார் அளிக்காத நிலையில் வினோத் ஜோஸ்வா அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து 5 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

நாளுக்குநாள் அவரின் தொந்தரவு அதிகரிக்கவே, மனமுடைந்த அந்த இளம்பெண் இதுகுறித்து கடம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகிலா வழக்குப்பதிவு செய்து பாதிரியார் வினோத் ஜோஸ்வாவை கைது செய்தார். அவர், 20 வயது இளம்பெண்ணை மட்டும்தான் பாலியல் துன்புறுத்தல் செய்தாரா அல்லது வேறு பெண்களிடமும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சர்ச்சுக்கு பாட்டு கற்றுக் கொள்ள வந்த இளம்பெண்ணை பாதிரியார் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கிண்டி ரேஸ்கோர்ஸ் குத்தகை ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையிலான நேரடி விவாதம்

சட்டப் பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதத்தை பாஜக அரசு கட்டுப்படுத்தியதா?.. 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடப்பதால் உச்சகட்ட பாதுகாப்பு