திருமலை: நெல்லூர் மாநகராட்சி பெண் மேயர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு இன்று பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் மேயர் அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளார். நெல்லூர் மாநகராட்சி மேயராக இருப்பவர் ஸ்ரவந்தி. இவரது கணவர் ஜெயவர்தன். இவர்கள் இருவரும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் ஆந்திராவில் நடந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் மாநகராட்சி மேயராக உள்ள ஸ்ரவந்தி மற்றும் அவரது கணவர் இருவரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினர். தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏ கோட்டம்ரெட்டி தர் ரெட்டியுடன் இணைந்து அரசியல் பயணம் மேற்கொள்ளப்போவதாக ஸ்ரவந்தி கூறினார்.