Sunday, June 30, 2024
Home » இளம்பெண்ணை பழக விட்டு அரங்கேற்றம்; வக்கீலை காரில் கடத்தி கொல்ல முயன்ற கும்பல்; சினிமா போல் துரத்தி மடக்கிய போலீசார்: பரபரப்பு தகவல்கள்

இளம்பெண்ணை பழக விட்டு அரங்கேற்றம்; வக்கீலை காரில் கடத்தி கொல்ல முயன்ற கும்பல்; சினிமா போல் துரத்தி மடக்கிய போலீசார்: பரபரப்பு தகவல்கள்

by Suresh

சேலம்: சேலத்தில் வக்கீலை காரில் கடத்தி, கத்தியால் வெட்டி கொல்ல முயன்ற கும்பலை ேபாலீசார் கைது செய்தனர். சினிமா போல் துரத்திச் சென்று மடக்கி பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சூரமங்கலம் தர்மன் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (48). இவர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வக்கீலாக உள்ளார். இவருடன் கடந்த 2019ம் ஆண்டு, மதுரையை சேர்ந்த பெண் வக்கீல் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பெண்ணுக்கு மதுரை அணையூரை சேர்ந்த இளங்கோவன் என்பவருடன் திருமணமானது.

திருமணத்திற்கு பிறகும், அப்பெண்ணுடன் வக்கீல் செந்தில்குமார் தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளார். இதனை அறிந்த இளங்கோவன், தனது மனைவி மற்றும் வக்கீல் செந்தில்குமாரை எச்சரித்துள்ளார். ஆனாலும், இவர்களின் பழக்கம் நீடித்துள்ளது. இதனால், செந்தில்குமாரை பழிவாங்க இளங்கோவன் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள கடையில் வக்கீல் செந்தில்குமாரும், ஒரு இளம்பெண்ணும் நின்றிருந்தனர். அப்போது, அங்கு வந்த இளங்கோவன் உள்ளிட்ட 5 பேர் கும்பல், திடீரென செந்தில்குமாரை தரதரவென இழுத்து, காரில் ஏற்றி வேகமாக கடத்திச் சென்றனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அப்ேபாது, கோரிமேட்டில் இருந்த அழகாபுரம் போலீசார், வக்கீல் செந்தில்குமாரை கடத்திச் சென்ற காரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்று, கலெக்டர் பங்களா அருகே மடக்கி நிறுத்தினர்.

அப்போது காருக்குள் இருந்து இறங்கிய 5 பேர் தப்பியோடி விட்டனர். இளங்கோவன் மட்டும் போலீஸ் பிடியில் சிக்கினார். காருக்குள் வக்கீல் செந்தில்குமார், தலை மற்றும் இடது கையில் கத்தியால் வெட்டப்பட்ட ரத்தக்காயத்துடன் கிடந்தார். அவரை மீட்ட போலீசார், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செந்தில்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் பிடியில் சிக்கிய இளங்கோவனை (44), கன்னங்குறிச்சி போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இக்கடத்தல் தொடர்பாக பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதுபற்றி போலீசார் கூறியதாவது: கடத்தப்பட்ட செந்தில்குமாரும், இளங்கோவனின் மனைவியும் விசாகப்பட்டினத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் ஒன்றாக படித்த போது பழகியுள்ளனர். படிப்பு முடிந்த நிலையில், இளங்கோவனுடன் அப்பெண்ணுக்கு திருமணம் ஆகியுள்ளது. அதன்பின்னும் செந்தில்குமார் போனில் பேசியுள்ளார். இதை அறிந்து இளங்கோவன் கேட்டபோது, தனக்கு இளங்கோவன் மனைவி ரூ.3 லட்சம் பணம் தர வேண்டும். அதனால் தான் பேசி, கேட்டு வருகிறேன் என கூறியிருக்கிறார். ஆனால், தன்னுடன் வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் எந்த தவறான தொடர்பும் இல்லை என்பதை கூறிவிட்டு செல்லுங்கள் என செந்தில்குமாரை இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், அவர் நேரில் வந்து சொல்ல மறுத்துள்ளார்.

இதனால் செந்தில்குமாரை மதுரைக்கு கடத்தி செல்ல வேண்டும் என இளங்கோவன் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக திருப்பூரை சேர்ந்த தனது நண்பர்களான ஒரு பெண் உள்ளிட்ட 4 பேருடன் பேசி திட்டமிட்டுள்ளார். அதில், செந்தில்குமாரை பெண்ணைக் கொண்டு வீழ்த்த வேண்டும் என திட்டமிட்டு, திருப்பூரை சேர்ந்த தேவி என்ற பெண்ணை, அவருடன் போனில் பேச வைத்துள்ளனர். ஒரு வழக்கு தொடர்பாக சந்தித்து பேச வேண்டும் என அறிமுகமாகி, தொடர்ந்து தேவி பேசி வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் அவரை சேலத்திற்கு வரும்படி செந்தில்குமார் அழைத்துள்ளார். அதன்படியே, நேற்று முன்தினம் சேலத்திற்கு வந்த தேவியை, தனது பைக்கில் அழைத்து சென்று கோரிமேடு பகுதியில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துள்ளனர். படம் முடிந்து வெளியே வரும்போது, தேவி ரகசியமாக இளங்கோவனிடம் கோரிமேடு ஜெராக்ஸ் கடைக்கு வருகிறோம் எனக்கூறியுள்ளார். அதன்படியே அந்த கடைக்கு வந்ததும், தயாராக காரில் வந்த இளங்கோவன் உள்ளிட்ட 5 பேரும், வக்கீல் செந்தில்குமாரை கடத்தியுள்ளனர்.

காருக்குள் ஏற்றியபோது, அவர் சத்தம் போட்டதால், வாயை பொத்தி தலையில் கத்தியால் வெட்டியுள்ளனர். அப்போது தடுத்தபோது கையில் வெட்டு விழுந்துள்ளது. கலெக்டர் பங்களா அருகே போலீசில் இளங்கோவன் சிக்கினார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து வக்கீல் செந்தில்குமாரை காரில் கடத்தி கத்தியால் வெட்டிய இளங்கோவன் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் மீது கடத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இக்கடத்தலில் ஈடுபட்ட இளங்கோவனின் கூட்டாளிகளான ஆனந்த் (எ) ஆனந்த்பாபு (28), சந்தோஷ் (எ) மணிகண்டன் (24), சிக்கந்தர் (எ) சிக்கந்தர்பாட்சா (21) ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கில் தேவி, இளங்கோவனின் அண்ணன் மகன் ஜெயசூர்யா ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

four + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi