கோவை: கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் நேற்று முன்தினம் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சாலையில் மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழிக்குள் தவறி விழுந்தார். இதில் அவருக்கு கை, காலில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த சிலர் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டனர்.
பெண் பாதாள சாக்கடை குழிக்குள் விழும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என பொதுமக்கள் விமர்சித்தனர். இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் உதவி செயற்பொறியாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.