குளித்தலை: கரூர் அருகே காதல் விவகாரத்தில் ஐடிஐ மாணவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காதலன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த கணக்கப்பிள்ளையூரை சேர்ந்த மனோகரன் மகன் குரு பிரகாஷ் (19). அய்யர்மலை அரசு கல்லூரியில் இரண்டாமாண்டு பிஎஸ்சி கணிதம் படித்து வருகிறார். இவரது பெரியப்பா மகன் விக்னேஷ் (16). வைப்புதூரில் உள்ள தனியார் ஐடிஐயில் முதலாமாண்டு எலக்ட்ரீசியன் படித்து வந்தார். இந்நிலையில் குரு பிரகாசும், அதே கல்லூரியில் படிக்கும் மாணவியும் கடந்த 6 மாதமாக காதலித்து வந்ததாகவும், கடந்த ஒரு மாதமாக குருபிரகாசிடம் அந்த மாணவி பேசவில்லை என தெரிகிறது. இந்நிலையில், குளித்தலை கீழகுட்டப்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண்குமார் (எ) அருண்(21) என்பவரை அந்த மாணவி காதலித்ததாக தெரிகிறது. இதுதெரிந்த குருபிரகாஷ், தனது செல்போனில் மாணவியை தொடர்பு கொண்டு கண்டிக்கவே அவர், காதலனிடம் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அருண், கடந்த 14ம்தேதி குருபிரகாஷிடம் நீ எப்படி என் காதலியிடம் பேசலாம் என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை கல்லூரி முடிந்து ஊருக்கு செல்வதற்காக அய்யர்மலை பஸ்ஸ்டாப்பில் குருபிரகாஷ், விக்னேஷ் மற்றும் அதே ஊரை சேர்ந்த சிலருடன் பேசி கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த அருண், நண்பர் செல்லத்துரை ஆகியோர் குரு பிரகாஷை கட்டையால் தாக்கினர். இதை தடுக்க வந்த விக்னேஷையும் சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை விக்னேஷ் இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து காதலன் அருண், நண்பர்கள் செல்லத்துரை, சரவணன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.