கண்ணாடி முகப்பில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம் விதிக்கப்படும்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களின் கண்ணாடி முகப்பில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும் என்றும் வேண்டுமென்றே அவற்றை ஒட்டாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரித்துள்ளது. பாஸ்டேக் ஸ்டிக்கர் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், வாகனத்தின் முகப்பு கண்ணாடியின் உள் பக்கத்தில் பாஸ்டேக் வில்லைகள் ஒட்டாமல் வாகன ஓட்டிகள் வருவதால் சுங்க சாவடிகளில் காலதாமதம் ஏற்படுகிறது.

இது இதர வாகனங்களில் வருபவர்களுக்கு அசவுகர்யத்தை ஏற்படுத்துகிறது. இதையடுத்து கண்ணாடியின் முகப்பில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்க சுங்க சாவடிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கண்ணாடியின் முகப்பில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து சுங்க சாவடிகளிலும் அறிவிப்பு பலகையில் தகவல் எழுதி வைக்க வேண்டும். மேலும், பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாமல் வரும் வாகனங்களின் பதிவு எண்களை சுங்க சாவடிகளில் பதிவு செய்திருக்க வேண்டும். இதன் மூலம் இரு மடங்கு கட்டண வசூல் மற்றும் சுங்க சாவடியில் வாகன வரிசையில் குறிப்பிட்ட வாகனம் வந்ததற்கான அத்தாட்சியாக அது இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Related posts

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்