விம்பிள்டன் டென்னிஸ்; அரையிறுதியில் பார்போரா: ஜோகோவிச், ரைபாகினா முன்னேற்றம்

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவா தகுதி பெற்றார். காலிறுதியில் லாத்வியாவின் யெலனா ஆஸ்டபென்கோவுடன் (27 வயது, 14வது ரேங்க்) நேற்று மோதிய பார்போரா கிரெஜ்சிகோவா (28 வயது, 32வது ரேங்க்) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் ஆஸ்டபென்கோ கடும் நெருக்கடி கொடுத்ததால் ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது.

அதில் உறுதியாக விளையாடிய பார்போரா 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் 1 மணி, 40 நிமிடம் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை (29 வயது, 21வது ரேங்க்) எதிர்கொண்ட கஜகஸ்தான் நட்சத்திரம் எலனா ரைபாகினா (25 வயது, 4வது ரேங்க்) 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 1 மணி, 1 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சுடன் நேற்று மோதுவதாக இருந்த ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார் காயம் காரணமாக விலகியதை அடுத்து, ஜோகோவிச் 13வது முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த தொடரில் அவர் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

செய்தியாளர் சந்திப்பின் போது ஒன்றிய அமைச்சர் எச்.டி.குமாரசாமிக்கு திடீரென மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதால் பரபரப்பு

பல்கலை. இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1.52 லட்சம் கன அடியாக அதிகரிப்பு