வில்லியனூர் : வில்லியனூர், பத்துக்கண்ணு சப்தகிரி நகரை சேர்ந்த வினோத் (30) மின்துறை ஊழியர். இவரது மனைவி சத்தியா (26). காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வந்தார். வினோத், சத்தியாவுக்கு கடந்த 2017ம் ஆண்டு திருமணமாகி 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக சத்தியாவுக்கும், கணவர் வினோத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இதனால் வினோத் திருபுவனையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் பத்துகண்ணு வீட்டில் சத்யா தன் குழந்தை மற்றும் அவரது பெற்றோர் உடன் வசித்து வந்துள்ளார்.
இதனிடையே தீபாவளி அன்று சத்யா தனது அறையில் உள்ள சீலிங் பேனில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சத்யா தாய் உமா மகேஸ்வரி வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் கணவர் வினோத், சத்யாவுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. இதையடுத்து வில்லியனூர் போலீசார் கணவர் வினோத்தை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.