Thursday, September 26, 2024
Home » தங்கம் இனி தங்குமா?

தங்கம் இனி தங்குமா?

by Neethimaan

அ ன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்கள், டூவீலர்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஆடம்பர பொருட்கள் என எதனை வாங்கினாலும், அதன் மதிப்பு ஆண்டுகள் கூட கூட குறையத்தான் செய்யும். ஆனால், வீட்டுமனை மற்றும் தங்கம் உள்ளிட்ட ஆபரணங்களின் சந்தை மதிப்பு ஆண்டுகள் கூட கூட ராக்கெட் வேகத்தில் எகிறும். சர்வதேச அளவில் வணிக சந்தையை பொறுத்தவரை வீட்டுமனைக்கு அடுத்ததாக தங்கம் சேமிப்பு மிக முக்கியமான ஒன்றாக, லாபகரமான முதலீடாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் ஒன்றிய பாஜ அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தது. பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரியும் 15 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை தடாலடியாக குறையும்.

ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்துக்குள் வந்து விடுமென பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இதற்கு ஏற்றார்போல பட்ஜெட் தாக்கல் செய்த தினத்தில், தங்கம் சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. எப்போதுமே, பாஜ அரசு ஒரு அறிவிப்பு செய்தால், அதன் விளைவுகள் போக போகத்தான் தெரியும். இதை மீண்டும் உறுதி செய்வது போல, அடுத்தடுத்த நாட்களில் தங்கத்தின் விலை ஏற்றம் காணத்தொடங்கியது. ஒரு காலத்தில் ஒரு பவுன் தங்கமே ரூ.7 ஆயிரத்துக்கு விற்றது போக, நேற்று முன்தினம் ஒரு கிராம் விலையே ரூ.7 ஆயிரத்தை தொட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கடந்த 21ம் தேதி சவரன் ரூ.55,680க்கு விற்ற தங்கம், நேற்று ரூ.56,480க்கு விற்பனை செய்யப்பட்டது. நகைக்கேற்ற செய்கூலி, சேதாரத்தை எல்லாம் கணக்கிட்டால், குறைந்தபட்சமாக கடையில் வாங்கும் தங்க நகையின் விலை ஒரு சவரனுக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரை தொடும்.

அதாவது, கடந்த 5 நாள்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.175, சவரனுக்கு ரூ.1,400 உயர்ந்துள்ளது. கடந்த 16ம் தேதி கிராம் ரூ.6,880க்கு விற்ற தங்கம், நேற்றைய நிலவரப்படி ரூ.7,060 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சவரன் ரூ.56,480 என விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் நடுத்தர, ஏழை மக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் இந்த ஆண்டுக்குள் சவரன் ரூ.60 ஆயிரத்தை தொட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பல ஆண்டுகளாகவே திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் தங்க நகை போடுவது ஒரு சம்பிரதாயமாக மாறி விட்டது. ‘திருமணத்தில் எத்தனை பவுன் போடுவீங்க…’ என்றுதான் முதல்கட்ட பேச்சே துவங்கும்.

இந்த சூழலில், தங்கம் விலை தடாலடியாக உயர்ந்து வருவதால், நகை வாங்குவது மட்டுமல்ல.. திருமணம் என்ற ஒன்று கூட எட்டாக்கனியாகி விடும் சூழலை உருவாக்கி விடும். வீட்டில் தங்க நகை என்ற ஒன்று இருக்குமா என்பதே கேள்விக்குறியாகி விடும். வேண்டுமென்றால் வீட்டு உறுப்பினர்களை ‘தங்கமே’ என கூறி ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டிய சூழல் வந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. எனவே, அன்றாட வாழ்வில் அவசியமாக மாறி விட்ட தங்கத்தின் விலையை கட்டுக்குள் கொண்டு வர ஒன்றிய அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

You may also like

Leave a Comment

sixteen − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi