மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே 2வது நாளாக மீண்டும் அதே தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் அங்கு பயிரிட்டிருந்த வாழை மரங்களை சூறையாடியது. மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (60). ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இதே போல் நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியிலும் 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. தோட்டத்தில் நேந்திரன் வாழை பயிரிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இவரது தோட்டத்துக்குள் புகுந்த 3 காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதம் செய்தது. இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் அதே தோட்டத்துக்குள் புகுந்த 3 காட்டு யானைகள், மீண்டும் அங்கு பயிரிடப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட நேந்திரன் வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசு, இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.