பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள அய்யன்கொல்லி தட்டாம்பாறையை சேர்ந்தவர் சுரேஷ் (36). விவசாயியான இவருக்கு மனைவி ஷில்பா (30), 2 குழந்தைகள் உள்ளனர். வனத்தையொட்டி உள்ள இந்த பகுதிக்கு குடிநீர், உணவு தேடி வனவிலங்குகள் அவ்வப்போது வந்துவிடும். இந்த நிலையில், சுரேசின் விவசாய தோட்டத்திற்குள் நேற்றுமுன்தினம் யானை புகுந்தது. இதனால் சுரேஷ் மற்றும் சில வாலிபர்கள் சேர்ந்து தோட்டத்திற்கு சென்று யானையை வனத்திற்குள் விரட்டி உள்ளனர். அப்போது சுரேசுக்கு ஏதோ பூச்சி கடித்தது போன்று இருந்துள்ளது.
அப்போது அவர் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் வீட்டுக்கு வந்துள்ளார். இதன்பிறகு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், தேள் கடித்ததால் விஷம் உடல் முழுவதும் பரவிவிட்டது என்று தெரிவித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தேள் கடித்ததில் உடல் முழுவதும் விஷம் பரவி சுரேஷ் உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.