Sunday, October 6, 2024
Home » தெற்கே இருந்து பயணத்தை ஆரம்பிக்க திட்டம் போட்டிருக்கும் சின்ன மம்மி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

தெற்கே இருந்து பயணத்தை ஆரம்பிக்க திட்டம் போட்டிருக்கும் சின்ன மம்மி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

by Suresh

‘‘சின்ன மம்மி விவகாரம் என்ன..’’ என்று ஆர்வத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நீ……….ண்ட நாள் வனவாசத்திற்கு பிறகு தொண்டர்களை சந்திக்கப் போகிறாராம் சின்ன மம்மி. சிறைப்பறவையாக இருந்தவர் இலை கட்சியில் நுழைய எவ்வளவோ முயற்சி செய்தார். எதுவும் நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து ஓய்வு எனவும் அறிவித்தார். அவர் சிறையில் இருந்து வந்த பிறகு ஒரு மக்களவைத் தேர்தலும், ஒரு சட்டமன்ற தேர்தலும் முடிந்து விட்டது. இரண்டிலும் இலை கட்சிக்கு படுதோல்வி தான் மிஞ்சியது. அதுவும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இலை கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல, அந்த கட்சி பல தொகுதிகளில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அல்வா மக்களவைத் தொகுதியில் இலை கட்சிக்கு 3ம் இடமா, 4ம் இடமா என்பதில் கூட கடைசி வரை இழுபறி தான் நீடித்தது. இலை கட்சி இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறாராம் சின்ன மம்மி. அதற்காக தொண்டர்களை சந்திக்க திட்டம் போட்டுள்ளாராம். தனது பயண திட்டத்தை தயாரித்துள்ள சின்ன மம்மி தெற்கே உள்ள காசி என்ற புதிய மாவட்டத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறாராம். இதற்காக அந்த ஊர் எஸ்பியிடம் பாதுகாப்பு கேட்டு மனு போட்டிருக்கிறார்கள். சின்ன மம்மியின் பயண திட்டத்தால் ஆதரவாளர்கள் குஷியாகி இருக்கின்றனர். மத்தாப்பு சரி தான். அதை பற்ற வைத்த பிறகு தான் தெரியும், அது நமத்துப் போனதா….என்று என பீடிகை போடுகின்றனர் இலை கட்சியினர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கடைக்கோடி மாவட்ட இலை கட்சியில் கோஷ்டி பிரச்னை விஸ்வரூபம் எடுத்து இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஆமா.. கோஷ்டி பிரச்னை கடைசியில் காவல்துறை வரைக்கும் போய் இருக்கிறதாம். நடந்து முடிஞ்ச நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சி வேட்பாளர் டெபாசிட் இழந்து, 4ம் இடத்துக்கு சென்ற பின், கட்சியை நாங்க பலப்படுத்த போறோம் என்று கூறி முன்னாள் மா.செ.க்கள் ஒன்று திரண்டு இருக்கிறார்களாம். சமீபத்தில், இவர்களில் சிலர் சேர்ந்து கட்சியின் தற்போதைய முக்கிய நிர்வாகி படம் இல்லாமல் போஸ்டர் அடிச்சு ஒட்டினார்கள். அதோடு இல்லாமல் ஒன்றிய, நகரம், பேரூரில் தற்போது பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் சிலரின் படத்தை போட்டும் போஸ்டர், பிளக்ஸ் பேனர்கள் வைக்கிறார்களாம். அதிலும் முக்கிய நிர்வாகி படம் இல்லையாம். இதை பார்த்த மற்ற நிர்வாகிகள், என்ன அண்ணே.. போஸ்டர் அடிக்கட்டுமானு கேட்டீங்க. அதற்காக இப்படி எங்களை மாட்டி விடும் வகையில், அவரு படம் இல்லாமல் அடிச்சு எங்களை அசிங்கப்படுத்தீட்டீங்களே என கேட்டு முறைப்பாக பேசி வருகிறார்களாம். இதில் ஒரு சிலர் போய் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்து இருக்காங்களாம். எங்க அனுமதி இல்லாமல், எங்க படத்தை போட்டு அந்த முன்னாள் மா.செ. போஸ்டர் அடிச்சி இருக்காரு. அவரு மேலே கேஸ் போடுங்கள் என கூறி உள்ளார்களாம். ஆனால் இதற்கெல்லாம் அந்த வில்லன் நடிகர் பெயரை கொண்ட முன்னாள் மா.செ. பயப்பட மாட்டாராம். போஸ்டர் அடிச்சது குத்தமாடா, .? நான் மாவட்ட செயலாளராக இருந்த போது என் படத்தை போடாமல் போஸ்டர் அடிச்சவங்களை தட்டி கேட்டீங்களா. இப்போது மட்டும் வருகிறீர்களே என சமூக வலைத்தளத்தில் எதிர் கேள்வி கேட்டு இருக்கிறாராம். ஏற்கனவே கட்சியை பார்த்து ஊரு சிரிப்போ, சிரிப்புனு சிரிக்கிறது. இதுல உட்கட்சி கோஷ்டி பிரச்னை காவல் நிலையம் வரை போய் இருக்கு என்று ரத்தத்தின் ரத்தங்கள் வேதனையுடன் கூறி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ரயில்வே பாதுகாப்பு படை காக்கிகள் பற்றி புகார் வருதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்தில பேட்டை என்று முடியிற ஊர்ல ரயில்வே காக்கிகள், ரயில்வே பாதுகாப்பு படை காக்கிகள் நிலையம் உள்ளது. இவங்கதான் பேட்டை ரயில்நிலையத்துக்கு பாதுகாப்பு கொடுக்குறாங்க. ஒரு நாளைக்கு 50க்கும் மேற்பட்ட ரயில் வந்து போகுது. இந்த ரயில்வே பிளாட்பாரத்துல லைசன்ஸ் உடன் வியாபாரம் செய்யுற வியாபாரிகள் 200 பேர் இருக்கிறார்களாம். ஆனா லைசன்ஸ் இல்லாம 300க்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்கிறார்களாம். இதுல என்ன கூத்து என்றால் 2 துறை காக்கிகளும், பாதுகாப்பு பணியின் போது ரயில்களில் அவ்வப்போது லைசன்ஸ் இல்லாமல் வியாபாரம் செய்யும் அவர்களிடம் 300 டூ 700 வரை வசூலிக்கிறார்களாம். தர மறுத்தால் கேஸ் போட்டு வியாபாரம் செய்யவிடாமல் செய்றாங்களாம். இதனால எதுக்கு வம்புன்னு கேட்பதைக் கொடுத்துவிட்டு செல்கிறார்களாம். இது மட்டுமல்லாமல் ஒரு மாதத்துக்கு இத்தனை கேஸ் போட வேண்டும் என மேல் அதிகாரி உத்தரவு இருக்கிறதாம். இதனால கேஸ் கிடைக்காவிட்டால் லைசன்ஸ் வெச்சி வியாபாரம் செய்ற வியாபாரிகள் மேலயும் கேஸ் போட்டு கணக்கு காட்டுகிறார்களாம். அதனால இதையெல்லாம் உயர் அதிகாரிகள் கண்காணித்து வசூலில் ஈடுபடும் காக்கிகளை களையெடுக்க வேண்டும்னு கோரிக்ைக குரல் ஒலிக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

1 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi