‘‘குக்கர் கட்சிக்காரங்க நொந்துபோய் இருக்காங்களாமே..’’ என்று ஆரம்பித்தார் பீட்டர் மாமா.
‘‘வடமாநில நதி பெயரில் முடியும் மாவட்டத்தில் குக்கர் கட்சிக்காரர்கள் தங்கள் தலைமையை நினைத்து ரொம்பவே புலம்பி தவித்து வருகின்றனர். இலைக்கட்சி – தாமரைக்கட்சி கூட்டணி இல்லை என அறிவிப்பு வெளியானதுமே தாமரை பக்கம் போய் ஒட்டிக்கொண்டார் குக்கர் கட்சிக்காரர். எப்படா ஆளும் தேசிய கட்சியின் தயவு கிடைக்கும் என ஏற்கனவே காத்துக்கிடந்த அவருக்கு, இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறதென நினைக்கிறார். இதனால் ஏற்கனவே உள்ள வழக்குகளில் இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க திட்டமாம். அதற்கான பேச்சுவார்த்தையும் நடக்குதாம். வெளியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி, தொகுதி எண்ணிக்கையில் குழப்பம் என செய்தி வந்தாலும் உண்மையான பேச்சுவார்த்தை வழக்குகளுக்காக மட்டும்தானாம். சுய லாபத்துக்காக கூட்டு சேருவது என்ன நியாயமென இக்கட்சிக்காரர்கள் போவோர், வருவோரிடம் எல்லாம் புலம்புகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சி மாஜி அமைச்சர் புலம்பலை தொண்டர்களே நக்கல் அடிக்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கும், தாமரைக்கும் இடையே இருந்த பனிப்போரால் தாமரை கூட்டணியில் இருந்து இலை கட்சி சமீபத்தில் விலகியது. உறவை சேலம்காரர் முறித்து கொண்டதை மனுநீதி சோழன், டெக்ஸ்டைல்ஸ், மன்னர், மலைக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்ட மாஜி அமைச்சர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் சேலம்காரர் மீது உள்ளே அதிருப்தியை அவர்களால் வெளியே காட்டி கொள்ள முடியாமல் இருக்கிறாங்க. தாமரைக்கு எதிராக மற்ற மாஜி அமைச்சர்கள் பேசி வந்தாலும் கடலோர மாஜி அமைச்சர்கள் மட்டும் தாமரைக்கு எதிராக எதுவும் வாய் திறக்காமல் மவுனமாக இருக்கிறாங்க. இந்த மாஜி அமைச்சர்களில் கடலோர மாவட்டத்தை சேர்ந்த ‘மணியானவர்’ கூட இருக்கிற இடம் தெரியாமல் இருந்து வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலை கட்சி வெற்றி பெறுவதே பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில், கூட்டணியில் நீடிக்க தாமரை தலைவர்கள் தயாராக இருந்தாலும் சேலம்காரர் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருவதால் யாருக்கு நஷ்டம் என ஆதரவாளர்களிடம் மணியானவர் தினம் தினம் புலம்புகிறாராம்… ‘மணியானவர்’ இப்படி புலம்புவது கடந்த 10 வருட ஆட்சியில் சம்பாதித்த சொத்துக்களை எப்படி காப்பாற்றுவது, திடீரென நம்ம பக்கம் ரெய்டு எதும் வந்து மாட்டிக்கொண்டால் என்ன செய்வதுன்னுதான் தினம் தினம் இந்த புலம்பல் என தொண்டர்களே நக்கல் அடிக்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘விஜிலென்ஸ் பிரிவை கலைக்கும் சிறை ஆபீசர்ஸ் பற்றி சொல்லுங்களேன்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டில் ஒன்பது சென்டிரல் ஜெயில் இருக்கு. இங்கு தண்டனை கைதிகளுக்கு பல்வேறு தொழில்கள் கற்றுக்கொடுக்கப்படுது. மனம் திரும்பி வெளியே போகும்போது, படிச்ச தொழிலை வச்சி வாழ்க்கையை தொடங்குவதற்காக வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்குறாங்க. ஆனா இதிலயும் துட்டுப்பார்க்கும் அதிகாரிகளும் இருக்கத்தான் செய்றாங்களாம். இந்த மோசடி பேர்வழிகளை கண்டுபிடிக்க ஒவ்வொரு சிறையிலும் விஜிலென்ஸ் பிரிவு தொடங்கப்பட்டு அதுவும் ஒருபக்கம் செயல்பட்டு வருது. அப்பிரிவில் இருப்போர், நேர்மையாக இருந்து எந்த பக்கம் தவறு நடந்தாலும் அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு போறாங்க.
இதனால உயர்மட்ட அளவில் ஊழல் அதிகாரிகள் பெருமளவு பாதிக்கப்பட்டதால அந்த விஜிலென்ஸ் பிரிவில் அனுபவம் உள்ள அனைவரையும் கூண்டோடு தூக்கிட்டாங்களாம். ஆனா பழம்தின்னு கொட்டை போடும் அதிகாரிகள் மட்டும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலா ஒரே இடத்தில் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்காம். மதுரை சிறையில் நடந்த ₹6 கோடி ஊழல், கோவை மத்திய சிறையில் ஒன்றரை கோடி ஊழல், சேலம் மத்திய சிறையில் 6 லட்சம் ஊழல் இதுபோன்ற மோசடிகளை வெளியே கொண்டு வந்ததே சிறை விஜிலென்ஸ்தானாம்.
கடத்தல் வழக்கில் சிக்கிய கோவை பெண் அதிகாரி எந்த நடவடிக்கையும் இல்லாம தப்பியது போன்ற தவறுகளை கண்டுபிடித்து சொல்வதில் சில அதிகாரிகளுக்கு சிறை விஜிலென்ஸ் இடைஞ்சலா இருக்காம். இதுபோன்ற ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டால், விஜிலென்ஸ் போலீஸ் விசாரணைக்குத்தான் அனுப்பணும். ஆனா சிறை விதிகள்படி நடவடிக்கை எடுக்கப்படுமுன்னு தப்பிக்க விட்டுறாங்களாம். சமீபத்தில் கூட மதுரையில் பிரிசன் பஜாருக்கு வரவேண்டிய ஒன்றரை கோடி பணம் வரலையாம். இப்படி ஸ்வாகா பண்ணும் அதிகாரிகளை ஆண்டுக்கு ஒருமுறையேனும் மாத்துவதோடு, மோசடி புகார்கள் மீது போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடனுமுன்னு நேர்மையான அதிகாரிகள் சொல்றாங்க. இந்த களேபரத்திற்கிடையில் எக்மோரில் உள்ள அதிகாரியின் ஐந்தாவது மாடியில் ஐந்து சொகுசு அறைகளும் தயாராகி வருதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
‘‘நாட்டின் கடைகோடி மக்களவை தொகுதியில் போட்டியிட கதர் கட்சியினர் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆமா… தற்போதைய உறுப்பினர் வசந்தமானவர் மட்டுமின்றி கதர்கட்சி ச.ம.உ.க்களும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றனராம். இதில் பெயரில் வெற்றியையும் சேர்த்துகொண்ட அந்த ச.ம.உ கூடவே தாமரை கட்சியில் சேர்ந்துவிடுவேன் என்று அவ்வப்போது கூறி ‘பல்ஸ்’ பார்க்கிறாராம். ஆனால் இது வெறும் மிரட்டல்தான், இப்போதைக்கு அதற்கு வாய்ப்பு இல்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். ச.ம.உ பதவி காலம் இன்னும் இருப்பதால்தான் இப்போதைக்கு அதற்கு வாய்ப்பு இல்லை, பதவி காலம் முடியும்போது அதற்கு வாய்ப்பு உள்ளது. மேடம் உள்ளூர் அரசியலை விட தேசிய அரசியலில் ஆர்வம் உள்ளது. அதனால்தான் மக்களவை தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார் என்கின்றனர். ஆனால் கதர்கட்சியிலோ மீண்டும் வசந்தமானவருக்கே வாய்ப்பு என்று உறுதியாக கூறுகின்றனர் கதர்கட்சியினர்..’’ என்றார் விக்கியானந்தா.