‘மனைவிக்கு உடல்நலம் சரியில்லையாம்’ 1 மாதத்தில் திருப்பி தந்து விடுவதாக கடிதம் எழுதி வைத்து கொள்ளை: தூத்துக்குடியில் சுவாரசியம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் முன்னாள் ஆசிரியர் தம்பதி வீட்டில் நகை, பணம் ெகாள்ளையடித்த திருடன், ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுவதாக உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம் ரோட்டைச் சேர்ந்தவர் சித்திரை செல்வின் (79). இவரும், இவரது மனைவியும் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர்.

சென்னையில் ஒரு வங்கியில் மகன் பணியாற்றி வருகிறார். மருமகளுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்ப்பதற்காக கடந்த 17ம் தேதி சித்திரை செல்வின் மனைவியுடன் சென்னை சென்றார். அப்போது வீட்டை பராமரிப்பதற்காக செல்வி என்ற பெண்ணிடம் வீட்டுச் சாவியை கொடுத்துள்ளனர். நேற்று மாலை வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய வந்த செல்வி, வீட்டின் கதவுகள் உடைந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசுக்கும், சித்திரை செல்வினுக்கும் தகவல் தெரிவித்தார்.

மெஞ்ஞானபுரம் போலீசார் போனில் சித்திரை செல்வினை தொடர்பு கொண்டு பீரோ லாக்கரில் வைத்திருந்த பொருட்கள் மற்றும் பண விவரங்களை கேட்டனர். பீரோவில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம், ஒன்றரை பவுன் எடை கொண்ட 2 ஜோடி கம்மல். ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. போலீசார் சோதனையிட்டதில் கொள்ளையன் பச்சை நிற மை பேனாவால் ஒரு உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்ததையும் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், ‘‘ என்னை மன்னித்து விடுங்கள்; என்னுடைய மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. மருத்துவ செலவுகளுக்காக கொள்ளையடித்தேன். ஒரு மாதத்தில் திருப்பித் தந்து விடுவேன்.’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து திருடனை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related posts

வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி துவங்கியது!

மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது!