தகாத உறவுக்கு இடையூறு காதலனுடன் சேர்ந்து கணவரை குத்திக் கொன்ற மனைவி கைது: தேனி அருகே பரபரப்பு

சின்னமனூர்: தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை, காதலனுடன் சேர்ந்து மனைவி கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் சின்னமனூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், சின்னமனூர் அடுத்த குச்சனூர் – சங்கராபுரம் இணைப்புச்சாலை அருகே, வனப்பகுதியில் கடந்த 6ம் தேதி ஒருவர் இறந்து கிடப்பதாக, சின்னமனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சின்னமனூர்போலீசார் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து தேனி மாவட்ட எஸ்பி சிவபிரசாத்தும் நேரில் விசாரணை நடத்தினார். இதில், இறந்து கிடந்தது போடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள உப்புக்கோட்டை அடுத்த மாணிக்காபுரத்தைச் சேர்ந்த சென்றாயன் (39) என தெரிந்தது. கொலை தொடர்பாக சென்றாயன் மனைவி பூங்கொடி (33) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சென்றாயன் பந்தல் போடும் கூலி வேலை செய்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவர், தினசரி வீட்டில் தகராறு செய்துள்ளார்.

கடந்த மாதம் குடித்துவிட்டு அருகில் உள்ள வீட்டில் புகுந்து பாத்திரங்களை நொறுக்கியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் வீரபாண்டி காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் சென்றாயனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 4ம் தேதி சிறையிலிருந்து திரும்பிய சென்றாயன், வீட்டில் மனைவி இல்லாததைக் கண்டு, குச்சனூர் – சங்கராபுரம் இணைப்புச் சாலையில், தனியார் தென்னந்தோப்பில் வசித்து வரும் மாமனார் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு மனைவியுடன், மாணிக்காபுரத்தை சேர்ந்த உறவினர் ராஜபிரபு (23) இருந்துள்ளார். ஏற்கனவே மனைவி மீது சந்தேகத்தில் இருந்த சென்றாயன் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இதையடுத்து அவரை சமாதானம் செய்த மனைவி ஊருக்கு செல்லலாம் என கூறியுள்ளார். இதையடுத்து, கணவன், மனைவி மற்றும் ராஜபிரபு ஆகியோர் ஒரே டூவீலரில் சென்றுள்ளனர். வழியில் குச்சனூர் இணைப்புச்சாலை அருகே, வனப்பகுதிக்கு சென்றாயனை அழைத்துச் சென்று, அங்கு ராஜபிரபு மற்றும் பூங்கொடி இருவரும் சேர்ந்து 23 இடங்களில் கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் அவரை கொன்றுள்ளனர். பின்னர் உடலை அங்கேயே போட்டுவிட்டு தப்பினர்.

திருப்பூரில் வேலை பார்க்கும் ராஜபிரபு 10 நாட்களுக்கு ஒருமுறை மாணிக்காபுரத்துக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் பூங்கொடிக்கும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. கணவன் சிறைக்கு சென்றபின் திருப்பூருக்குச் சென்று ராஜபிரபுடன் பூங்கொடி இருந்துள்ளார். தங்களின் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த சென்றாயனை கொல்ல முடிவு செய்து, இருவரும் சம்பவம் நடந்த முதல் நாள் திருப்பூரில் இருந்து திரும்பி வந்துள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதையடுத்து ராஜபிரபுவையும், பூங்கொடியையும் கைது செய்து உத்தமபாளையம் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் ஆஜர் படுத்தி, நீதிபதி உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

 

Related posts

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி