திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை தாலுகா வண்ணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பற்குணன்(48). கூலித் தொழிலாளியான இவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்து பெற்றார். பின்னர் அவர் திருவள்ளூர் அடுத்த சீயஞ்சேரி கிராமத்தை சேர்ந்த சங்கீதா என்பவரை மறுமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சங்கீதாவுக்கும் அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்குமிடையே ஏற்கெனவே வாய் தகறாறு ஏற்பட்டது. கடந்த 10ம் தேதி சீயஞ்சேரியில் உள்ள சங்கீதா வீட்டுக்குச் சென்ற பற்குணன் மீண்டும் இது தொடர்பாக கேட்டபோது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதனால் சங்கீதா தனது தாய் தந்தையருடன் சேர்ந்து பற்குணனை தகாத வார்த்தையால் பேசி விரட்டி அடித்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த பற்குணன் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுந்தார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த பற்குணன் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.