திருப்பூர்: மாமியாருடன் பேசியதால் மனைவி தலைமை துண்டித்து கொலை செய்ததாக கணவன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருப்பூர் கொங்கு மெயின்ரோடு டி.எம்.எஸ்.நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவரது சொந்த ஊர் மதுரை. இவர், திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி பவித்ரா (23). இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளான். மணிகண்டனுக்கு பவித்ரா 2-வது மனைவி ஆவார். அதுபோல் பவித்ராவும் ஏற்கனவே திருமணமானவர். 2-வதாக மணிகண்டனை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.
இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், பவித்ரா அவரது தாய் சரஸ்வதியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். ஆனால், அவருடன் பேசக்கூடாது என மணிகண்டன் கூறி வந்துள்ளார். ஆனால், அதையும் மீறி பேசினார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் 3வது மாடியில் இருவருக்கும் இதுதொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டதில் மணிகண்டன் வீட்டில் இருந்த அரிவாளால் பவித்ராவின் தலையை வெட்டி துண்டித்தார். சத்தம் கேட்டு கீழ் வீட்டில் வசித்தவர்கள் வந்தபோது, மனைவியை கொலைசெய்து விட்டதாக மணிகண்டன் கூறினார்.
இத்தகவலறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து வந்து மணிகண்டனை கைது செய்தனர். பவித்ராவின் தலைையையும் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பவித்ராவின் தலையில் மட்டும் 16 இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது. உடலிலும் சரமாரியாக வெட்டுக்காயம் காணப்பட்டது. மணிகண்டன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்: பவித்ராவின் தாயாரின் நடவடிக்கை சரியில்லாததால் அவருடன் பேசக்கூடாது என பவித்ராவை பலமுறை எச்சரித்தேன். அதையும் மீறி பேசி வந்ததால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
நேற்று ஏற்பட்ட தகராறின்போது அப்படி தான் பேசுவேன் என என்னை எதிர்த்து பேசியதால் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினேன். ஆனாலும் ஆத்திரம் தாங்காததால் தலையை வெட்டி துண்டித்தேன். பிறகு தலையை பூக்கூடையில் வைத்து தப்பி ஓட நினைத்தேன். அதற்குள் அக்கம்பக்கத்தினர் வந்ததால் சிக்கிக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.