பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் சின்னாண்டிமடம் கடும்பாடியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (45). இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்றிரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த அவர், மனைவியுடன் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். இதன்பின்னர் வீட்டின் அருகே கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
போதையில்தான் அவ்வாறு கூறுகிறார் என்று மனைவி அஜாக்கிரதையாக இருந்தபோது நிஜமாகவே கூவத்தில் குதித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து உடனே கொடுங்கையூர் போலீஸ்காரர்கள் விஜயகாந்த், செல்வகுமார் ஆகியோர் விரைந்துவந்து ஏணியை ஆற்றின் உட்புறமாக செலுத்தி அதன் வழியாக போலீசார் கூவத்தில் இறங்கி பாதி மயக்கத்தில் இருந்த நாகராஜை மேலே கொண்டுவந்தனர். பின்னர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.