இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்திலும், தெற்காசியா முழுக்கப் பரவலாகவும் காணப்படுகிறது. இப்பறவையின் உடல் சாம்பல் நிறத்தில் இருக்கும். ஆனால் முகமும், நெஞ்சுப் பகுதியும் வெண்மையாக இருக்கும். இப்பறவை சதுப்பு நிலங்களில் கோரைகளை ஒட்டி குளம், குட்டைகளில், சமவெளிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. தென்இந்தியா, பிலிப்பைன்சு மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் பாகிஸ்தான், மாலத்தீவுகள், இந்தியா, வங்காளதேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து தெற்காசியா முழுவதும் உள்ளது.
இப்பறவைகள் குறுகிய தூரம் மட்டுமே பயணித்து புதிய இடங்களில் குடியேறுகின்றன. இவை பெரும்பாலும் நன்னீர் அருகே காணப்பட்டாலும், நன்னீர் கிடைக்காதபோது உவர்ப்பான நீரிலும் வசிக்கும். இவை தங்கள் அலகினால் மண் மற்றும் நீரினைத் தோண்டி ஆராய்ந்து தனக்கு வேண்டிய உணவினைத் தேடும். சில சமயங்களில் ஆழமான நீரில் காட்டுக்கோழி பறவைபோல் இரை தேடி உண்ணும். வளைந்த தன் வாய்ப்பகுதியை வைத்து உணவினைச் சிறிது சிறிதாகக் கடிக்கும். முட்டைகள் 19 நாட்களில் குஞ்சு பொரித்து விடும். ஆண் நீர்க்கோழி மற்றும் பெண் நீர்க்கோழி இரண்டும் சேர்ந்து முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளைப் பராமரிக்கும்.