Friday, September 20, 2024
Home » மங்கை முதல் பேரிளம் பெண் வரை… ஹார்மோன்கள் செய்வது என்ன?

மங்கை முதல் பேரிளம் பெண் வரை… ஹார்மோன்கள் செய்வது என்ன?

by Nithya

நன்றி குங்குமம் தோழி

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என ஏழு பருவங்களாக பெண்களின் வயதினை நம் தமிழ் இலக்கணம் வகைப்படுத்தி இருக்கிறது. இதில் மங்கை (12 முதல் 13 வயது வரை) முதல் பேரிளம் பெண் (30 வயதிற்கு மேல்) வரையிலான பருவம் முழுவதும் ஹார்மோன்களின் செயல்களால் கட்டமைக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக, பூப்பெய்துவது தொடங்கி மாதவிடாய் சுழற்சி, தாய்மை, மாதவிடாய் நின்று போதல் வரை பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

இவ்வகையான மாற்றங்களுக்கு இயன்முறை மருத்துவம் ஆரோக்கியமான முறையில் எவ்வகையில் துணை நின்று அனைத்துப் பருவங்களுக்கும் உதவுகிறது என்பதனை இந்தக் கட்டுரை வாயிலாக தெரிந்துகொள்வோம்.

பூப்பெய்துதல்…

தாயின் கர்ப்பக் காலத்தில் இருக்கும்போதே ஒரு பெண்ணின் கருமுட்டையானது உருவாகிவிடும். இந்த முட்டைகள் பன்னிரண்டு வயதிற்கு மேல் மாதம் ஒன்று அல்லது இரு முட்டை என முதிர்ச்சி அடைந்து வெளிவரத் தொடங்கும். அப்படி முதல் தடவை வெளி வருவதே பூப்பெய்துதல் ஆகும்.

மாதவிடாய் சுழற்சி…

மாதா மாதம் சினைப்பையில் இருக்கும் கரு முட்டைகளில் ஒன்று அல்லது இரண்டு என நன்கு வளர்ந்து முதிர்ந்து வெடித்து கருப்பை குழாய்க்கு (Fallopian tube) வரும். அங்கு விந்தணுக்கள் இருப்பின் அதனோடு சேர்ந்து கருவாக மாறி சிசுவாக வளரும். அப்படி இல்லையெனில் கர்ப்பப்பைக்கு வந்து உதிரப்போக்குடன் உடம்பில் இருந்து வெளியேறிவிடும். இப்படி மாதா மாதம் நிகழ்வதே மாதவிடாய் சுழற்சி ஆகும்.

தாய்மை…

கரு உருவாகி, பத்து மாதம் முடிந்து சிசுவாக ஜனிப்பது முதல் தாய் பால் கொடுப்பதை நிறுத்தும் வரை தாயின் உடலில் பல மாற்றங்கள் நிகழும்.

மாதவிடாய் நின்று போதல்…

அனைத்து பெண்களின் சினைப்பையில் லட்சக்கணக்கான கருமுட்டைகள் இருந்தாலும், சில ஆயிர கருமுட்டைகள் மட்டுமே ஒவ்வொன்றாக முதிர்ந்து மாதா மாதம் வெளியே வரும் என்பதால், நாற்பதைக் கடந்த பெண்களுக்கு ஒரு கட்டத்தில் ஆரோக்கியமான கருமுட்டைகள் இல்லாமல் மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நின்று போகும்.

ஹார்மோன்கள்…

சினைப்பை போன்ற பெண் இனப்பெருக்க உறுப்புகளில் இருந்தும், மூளையின் ஒரு பகுதியில் இருந்தும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரஜஸ்டிரோன் (Progesterone) என இரு முக்கிய ஹார்மோன்கள் சுரக்கும். இது மட்டுமல்லாமல் ஃபாலிகுலார் ஸ்டிமுலேடிங் ஹார்மோன் (Follicular stimulating hormone), தைராய்டு ஹார்மோன்கள், லியூடினைசிங் ஹார்மோன் (Leuteinizing hormone), க்ரோத் ஹார்மோன் (Growth hormone), ப்ரோலேக்டின் ஹார்மோன் (Prolactin hormone) என வேறு ஹார்மோன்களும் இருக்கின்றன.இவை அனைத்தும் மொத்த இனப்பெருக்க உறுப்புகளையும் அதன் வேலைகளையும் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. அதனால், ஒரு ஹார்மோனின் சுரக்கும் தரம், அளவு, நேரம் பாதித்தாலும் பூப்பெய்துதல் தொடங்கி மெனோபாஸ் வரை பாதிப்புகள் நேரலாம்.

ஹார்மோன்களின் பங்கு…

*கருமுட்டை முழுமையாக வளர்ந்து, முதிர்ச்சி பெறவும், அதன் தரம் குறையாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.

*கருமுட்டை சரியான நேரத்தில் சினைப்பையில் இருந்து வெளியே வந்து கருப்பை குழாயினுள் தங்கவும், பின் கருப்பை நோக்கி நகரவும் வேண்டும். இதற்கு
உதவுவது ஹார்மோன்களே.

*கருத்தரித்த முதல் நிமிடத்தில் இருந்து பிரசவம் முடியும் வரை கருவை காப்பதே ஹார்மோன்கள்தான்.

*கருத்தரித்த பின் அடுத்த பத்து மாதத்திற்கு மாதவிடாய் நடக்காமல் இருக்கவும் ஹார்மோன்கள் உதவுகின்றன.

*கரு உருவான பின் அது நல்ல முறையில் கருப்பையில் பதிந்து வளரவும் இவை உதவுகின்றன.

*பூப்பெய்திய பெண்ணின் உடல் அந்த வயதிற்கு ஏற்றார் போல் மாற ஹார்மோன்களே உதவுகிறது.

*மாதா மாதம் சரியான நேரத்தில் மாதவிடாய் வருவதற்கு முக்கியக் காரணமும் ஹார்மோன்கள்தான்.

*மாதவிடாய் உதிரத்தின் அளவு, எவ்வளவு நாள் உதிரப்போக்கு நிகழ்கிறது என அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பது ஹார்மோன்களே.

*நம் மன நிலையில் அவ்வப்போது மாற்றம் நிகழலாம். குழப்பம், கோபம், படபடப்பு, அழுகை, துரித உணவின் மீது பிரியம் என வேறு உடல் சார்ந்த அறிகுறிகள் மாதவிடாயின் போதும், கர்ப்பக் காலத்திலும், மாதவிடாய் நிற்கும் சமயத்திலும் நிகழும். இதுவும் ஹார்மோன்களின் மாயாஜாலத்தினால்தான்.

* தரமான கருமுட்டைகளின் எண்ணிக்கையை உயர்த்துவதும் ஹார்மோன்கள்தான். இதனால்தான் சிலரால் இயல்பாக நாற்பது வயதிலும் கருத்தரிக்க முடிகிறது.* கருப்பை தன் வேலையை சரியாக செய்வதற்கு ஹார்மோன்கள் உதவுகின்றன. கருப்பை மட்டுமல்லாமல் கருப்பைக் குழாய், சினைப்பை, கர்ப்பப்பை வாய் என மற்ற இனப்பெருக்க உறுப்புகளும் உரிய நேரத்தில் உரிய வேலைகள் செய்யவும் பக்கபலமாய் இருப்பது ஹார்மோன்களே.

ஆபத்துக் காரணிகள்…

பூப்பெய்துதல், மாதவிடாய் சுழற்சி, தாய்மை, சுழற்சி நின்றுபோதல் என எல்லா கட்டத்திலும் பொதுவான ஆபத்துக் காரணிகள் மூலம் இடையூறு ஏற்படலாம். அவை :

*புகையிலை.

*மது அருந்துதல்.

*கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தல்.

*போதிய எட்டு மணி நேரத் தூக்கமின்மை.

*மன அழுத்தம்.

*மனச்சோர்வு, படபடப்பு.

*துரித உணவுகளை அடிக்கடி உட்கொள்ளுதல்.

*மாவு மற்றும் கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை மட்டும் தினசரி அதிகளவில் எடுத்துக்கொள்ளுதல்.

*உடற்பருமன்.

*ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள்.

*ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகம் உள்ளவர்கள்.

*தினசரி முறையில் காய்கறி பழங்களை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது.

*அந்தந்த வயதிற்கு ஏற்றார் போல் குடிநீர் அருந்தாமல் இருப்பது. குறைந்தபட்சம் ஒரு லிட்டர் நீர்கூட பருகாமல் இருப்பது.

*அதிக நேரம் ஓர் இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது.

*அதிக உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது. அதாவது, பள்ளி படிக்கும் பெண்கள் கூட வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது.

*அதிக அளவில் ஒப்பனை பொருட்களை பயன்படுத்துவது.

*அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது.

*வீட்டில் அதிக செயற்கை வேதியியல் பொருட்களை வைத்திருப்பது (உதாரணமாக, Room Freshener, Air freshener, ஊதுபத்திகள், கொசுக் கொள்ளி உபகரணங்கள்).

விளைவுகள்…

* இளம் வயதில் பூப்பெய்துதல்.
* சரியான மாதவிடாய் சுழற்சி இல்லாமல் இருத்தல்.
* உரிய நேரத்தில் கருமுட்டை வளராமல், முதிராமல் இருப்பது.
* கருத்தரிப்பது தள்ளிப்போவது.
* குழந்தையின்மை.
* கருமுட்டையின் தரம் குறைவாக இருப்பதால் பிறக்கும் குழந்தைக்கு ஏதேனும் மரபணு குறைகள் இருப்பது.
* இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவது.
* தைராய்டு சுரப்பியில் பிரச்னைகள் வருவது.
* மனநிலைகளில் அடிக்கடி மாற்றம் நிகழ்வது.
* மனச்சோர்வு, ஆர்வமின்மை உண்டாவது.

இயன்முறை மருத்துவத்தின் பங்கு…

தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்து வருவதால் எல்லா வயதிலும் மேல் சொன்ன எந்த பாதிப்பும் வராமல் தடுக்கலாம். என்னென்ன உடற்பயிற்சிகள் எந்தெந்த அளவில் எந்த வயதினர் செய்ய வேண்டும் என உரிய உடற்பயிற்சிகளை பரிந்துரைத்து கற்றுக்கொடுப்பது இயன்முறை மருத்துவர்களே. நீச்சல் குளத்தில் செய்யும் உடற்பயிற்சிகளையும் பரிந்துரைத்து கற்றுத் தருவர்.

உடற்பயிற்சிகளின் முக்கியத்துவம்…

* உடற்பயிற்சிகள் செய்வதால் முறையாக எல்லா ஹார்மோன்களும் சரியான அளவில் சரியான நேரத்தில் சுரந்து தன் வேலைகளை செய்யும்.

* கரு முட்டையின் தரம் உயர உதவியாய் இருக்கும்.

* மூளைக்கும் இனப்பெருக்க உறுப்புகளுக்கும் இருக்கும் இணைப்பு மேம்படும்.

* உடற்பயிற்சி செய்வதால் அதிக அளவில் சுரக்கும் ஹார்மோன்களை வெளியே எளிதில் கழிவாக அகற்றமுடியும். அதேபோல, குறைவாக சுரக்கும் ஹார்மோன்களை சீராக சுரக்க வழிவகுக்கும்.

* பி.சி.ஓ.டி, தைராய்டு பிரச்னை என மற்ற மாதவிடாய் சார்ந்த பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.

* கருமுட்டையின் எண்ணிக்கையும், தரமும் அதிகமாகும். இதனால் முப்பது வயதினை தாண்டினாலும் எளிதில் கருவுறலாம்.

* உண்டான கரு எளிதில் கலையாமல் இருக்கும்.

* 90 சதவிகித மாதவிடாய் பிரச்னைகளை வராமல் தடுக்க முடியும்.

வேறு சில…

* தினமும் குறைந்தது இரண்டு காய்களும், மூன்று பழ வகைகளும் உண்ண வேண்டும்.

* தினமும் குறைந்தது ஒரு பருப்பு வகையும், ஒரு சுண்டல் வகையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* தினசரி உணவில் சர்க்கரை, அதிக சாதம், அதிக இட்லி, சப்பாத்தி, பூரி என மாவு சத்து நிறைந்த பொருட்களை குறைக்க வேண்டும். உதாரணமாக, நான்கு இட்லிக்கு பதிலாக இரண்டு இட்லியும், ஒரு முட்டையும், ஒரு காயும் உண்ணலாம். ஆனால், முற்றிலும் மாவு சத்துக்களை தவிர்க்கக் கூடாது.

* தினசரி மைதா, எண்ணெயில் பொரித்தது, பேக்கரி பொருட்களான கொழுப்பு சத்தினை குறைக்க வேண்டும். அதேநேரம், நல்ல கொழுப்பு சத்துக்கள் உள்ள உணவுகளான நெய், வேர்க்கடலை போன்றவற்றை தவிர்க்க வேண்டாம். ஏனெனில், ஹார்மோன்கள் உற்பத்தியில் கொழுப்பு சத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.

* தினமும் புளிக்க வைத்த உணவு வகை ஏதேனும் ஒன்றை உண்ண வேண்டும். உதாரணமாக, இட்லி, பழைய சோறும் அதன் நீரும், மோர், தயிர் என எடுத்துக்கொள்ளுதல் அவசியம்.

* தினசரி குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.

* தூக்கமின்மையே அனைத்துப் பிரச்னைகளுக்கும் அடித்தளம் என்பதால், தினமும் எட்டு மணி நேர தூக்கம் அவசியம்.

* சூரிய ஒளியில் தினமும் இருபது நிமிடம் நிற்பது முக்கியம்.

* ஏதேனும் ஒரு விளையாட்டில் அல்லது நடனம் போன்ற உடல் அசைவுகள் சார்ந்த பொழுதுபோக்கில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளுதல் அவசியம்.

* முடிந்தவரை இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்துதல் நல்லது. உதாரணமாக, பிளாஸ்டிக் டப்பாக்களை சமையல் அறையில் குறைத்து கண்ணாடி அல்லது உலோக டப்பாக்கள் பயன்படுத்தலாம். ஏனெனில், பிளாஸ்டிக் டப்பாக்களில் எண்ணெய், பால், நெய் போன்ற பொருட்கள் வைப்பதால் நம் ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.

மொத்தத்தில் நாம் நம் அடுத்த தலைமுறையை உருவாக்கப் போகும் கருமுட்டை, நாம் நமது தாயின் வயிற்றில் இருக்கும்போதே உருவாகிவிடுகிறோம் என்பதால்தான், இன்றும் நம் நாட்டில் பெண் பிள்ளைகள் என்றாலே தனிக் கவனமும், கட்டளைகளும் கொடுத்து வளர்க்கிறோம் என்பதனை புரிந்துகொண்டு, ஒவ்வொரு பெண்களும் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் அனைத்துப் பருவத்திலும் இருக்கவேண்டியது மிக அவசியமாகிறது.

You may also like

Leave a Comment

fourteen + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi