மேற்குவங்க மாநில தலைவர் பதவி தற்காலிகமாகிவிட்டது: கார்கேவை விமர்சித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

கொல்கத்தா: எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இருந்தாலும் கூட, மேற்குவங்க மாநிலத்தை பொருத்தமட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. காங்கிரஸ் மாநில தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு எதிராக பலமுறை பேசியுள்ளார். இதனால் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீது காங்கிரஸ் தேசிய தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டியின் மேற்குவங்க பொதுச் செயலாளர் குலாம் அகமது மிர் அளித்த பேட்டியில், ‘மேற்குவங்க மாநிலத்தின் தலைவர் பதவியை மூத்த தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ராஜினாமா செய்யப் போவதாக கூறியுள்ளார்.

புதிய தலைவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார். இதுகுறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘மேற்குவங்க காங்கிரஸ் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு தேசிய தலைமை கேட்டுக் கொண்டது. எனது தலைமையில் கூட்டம் நடந்தது. இன்னும் நான் மேற்குவங்க காங்கிரஸ் தலைவராக உள்ளேன். கார்கே காங்கிரஸ் கட்சித் தலைவராக பதவியேற்ற நாளில் இருந்து, நாடு முழுவதும் பெரும்பாலான நிர்வாகிகளின் பதவிகளும் தற்காலிகமாகிவிட்டன. எனது பதவியும் தற்காலிகமாகிவிட்டது’ என்றார். முன்னதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட மேற்கு வங்க மூத்த தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழகம் முழுவதும் சிறப்பு குழு அமைத்து ஆதிதிராவிட மாணவ விடுதியில் வசதியை சீர் செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

நித்தியானந்தாவை போல் பிரபலமாக ஆசை என் கனவில் சித்தர்கள் சொன்னதைத் தான் பேசினேன்

ஆதிதிராவிடர் நலத்துறை நிதியில் 97.6% செலவு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடிக்கு அமைச்சர் கயல்விழி பதிலடி