கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜவில் இருந்து விலகிய எம்பி குனார், தனது எம்பி பதவியை தொடருவதாக தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ஜார்கிராம் தொகுதியின் பாஜ எம்பி குனார் ஹேம்பிராம். இந்நிலையில் குனார் திடீரென பாஜவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நேற்று காலை கட்சியில் இருந்து விலகிய அவர் யோது தனது எம்பி பதவியையும் ராஜினாமா செய்வதாக தெரிவித்து இருந்தார்.
மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக தான் பாஜவில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்த எம்பி குனார், ‘எனது எம்பி பதவிக்காலம் இரண்டு மாதங்களில் முடிவடைய உள்ளது. அதுவரை எம்பியாக எனது பணியை தொடருவேன்.
திடீரென எம்பி ராஜினாமா செய்துவிட்டால் அந்த தொகுதி மக்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்வார்கள். ஆகையால் எனது பதவிக்காலம் முடியும் வரை பணியை தொடருவேன். எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை’என்றார். இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூறுகையில், ‘குனாருக்கு பாஜ தோல்வியடையும் என்பது தெரியும். தோல்வி பயத்தின் காரணமாக தான் அவர் ராஜினாமா செய்துள்ளார்’ என்றார்.