சென்னை: நலத்திட்ட உதவிகள் மாணவ, மாணவியர்கள், சிறுபான்மையின மக்களுக்கு எவ்வித தடங்கலும் இல்லாமல் சென்றடைய வேண்டும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ், தமிழர், நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அனைத்து மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுடன் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கடனுதவிகள் தொடர்பாக ஆய்வு செய்தார்.
கபரஸ்தான் மற்றும் அடக்கஸ்தலங்களுக்கு புதிய சுற்றுசுவர் (ம) பாதை புனரமைத்தல் திட்டம், பாரத பிரதமரின் புதிய 15 அம்ச திட்டம், பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களிடம் கலந்தாலோசித்தார். திட்டங்களை எவ்வித தொய்வும் ஏற்படாத வண்ணம் செயல்படுத்திடுமாறும், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விடுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நலத்திட்ட உதவிகள் மாணவ, மாணவியர்கள், சிறுபான்மையின மக்களுக்கு எவ்வித தடங்கலும் இல்லாமல் சென்றடைய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.