திருவள்ளூர்,: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களிடமிருந்து 268 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொதுப் பிரச்னைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர்.
இதில், நிலம் சம்பந்தமாக 89 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 38 மனுக்களும், வேலை வாய்ப்பு வேண்டி 29 மனுக்களும், பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 43 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 69 மனுக்களும் என மொத்தம் 268 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மதுசூதனன், முட நீக்கு வல்லுநர் ப்ரீத்தா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.