Wednesday, September 18, 2024
Home » தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வரும் முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம்: சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வரும் முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம்: சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

by Karthik Yash

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வரும் முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க காத்திருக்கிறோம் என்று சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது. 48 விழுக்காடு நகரமயமாக்கப்பட்டுள்ளது. நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் முதல் மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு தமிழ்நாட்டில் உள்ளது.

இந்தியாவின் தேசிய சராசரியைவிட இருமடங்கு அதிகமாக உயர்கல்வியில் மாணவர்கள் சேரும் விகிதத்தை 48 சதவிகிதம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் சுமார் 45 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தெற்கு ஆசியாவில் சுகாதார சுற்றுலாவில் முன்னணி மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய வளர்ச்சி மிகுந்த மாநிலமான தமிழ்நாட்டிற்கு தொழில் துவங்க வருமாறு உங்களை எல்லாம் அழைப்பதற்காகதான் நான் இங்கே வருகை தந்திருக்கிறேன்.

300க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் திட்டத்தினை நிறுவியுள்ளனர். காக்னிசன்ட், போர்டு, கேட்டர்பில்லர், பிளெக்ஸ்ட்ரானிக்ஸ், சான்மினா, விஸ்டியான், எச்.பி, அப்ளைடு மெட்டீரியல்ஸ், ஜெனரல் எலெக்ட்ரிக், யுபிஎஸ், பைசர், ஹனிவெல், பேபால், குவால்காம் போன்ற பெரும் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி திட்டங்களை தமிழ்நாட்டில் நிறுவியுள்ளன. சான்பிரான்ஸிஸ்கோ பே பகுதி குறிப்பாக சிலிக்கான் வேலி தொழில்நுட்ப துறையின் வளர்ச்சிக்கு பெயர் பெற்ற பகுதி என்பது உலகம் அறிந்த உண்மை. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விரைவுபடுத்துவதற்கான வழிகளை கண்டறியும் பயனுள்ள விவாதங்களுக்கு இந்த மாநாடு பெரும் உதவிகரமாக அமையும்.

தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் இளைஞர்கள் மற்றும் பணிபுரியும் வயதினர் ஆகியோரின் மக்கள் தொகை சற்றே அதிகம். இது எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு தனித்துவமான நன்மையை வழங்குகிறது. எனினும் அதற்கேற்றவாறு வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது எங்களுடைய இலக்கு. 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய லட்சிய இலக்கு. ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். 35க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள், பன்னாட்டு பிரதிநிதிகள் மற்றும் புகழ்மிக்க தொழில் நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். அமெரிக்க பிரதிநிதித்துவம் இந்த மாநாட்டில் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தது.

அந்த மாநாடுகள் மூலமாக நாங்கள் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 631. ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் மதிப்பு 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதன் மூலமாக, 1.4 மில்லியன் நபர்களுக்கு நேரடியாகவும், 1.2 மில்லியன் நபர்களுக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பும் கிடைக்கும். இந்த பிரம்மாண்டமான நிகழ்வின் மூலம், உலக முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டின் மேல் உள்ள நம்பிக்கையை உலகத்திற்கு நாங்கள் எடுத்துக் காட்டினோம். கடந்த 3 ஆண்டுகளில் 3.1 மில்லியன் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் கிட்டத்தட்ட 120.48 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை ஈர்த்து இருக்கிறோம்.

தெற்காசியாவிலேயே முதலீடுகளை ஈர்த்திட உகந்த மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில் எண்ணற்ற அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை இங்கே நிறுவியுள்ளார்கள். இன்னும் பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான பல்வேறு தொழில் கொள்கைகளையும், சிறப்பு ஊக்குவிப்பு திட்டங்களையும் நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். மின்னணுவியல் கொள்கை, நிதிநுட்ப கொள்கை, ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை ஒவ்வொரு திட்டத்திற்கும் தேவைப்படும் அனுமதிகளை விரைவாகவும், எளிதாகவும் பெற்றிடும் வகையில், ஒற்றைச்சாளர இணையதளத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.

இதன்மூலம், முதலீட்டாளர்கள் தங்கள் திட்டத்திற்கு தேவையான அனுமதிகளை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ள முடியும். வணிகம் புரிதலை எளிதாக்குவதற்காக நாங்கள் மேற்கொண்ட சிறப்பு முயற்சிகளின் காரணமாக, வணிகம் புரிதலை எளிதாக்கும் தரவரிசையில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலம் என்று தமிழ்நாடு வரையறுக்கப்பட்டுள்ளது. மின்னணுவியல் (செமிகண்டக்டர்கள்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அறைகலன்கள், மேம்பட்ட உற்பத்தி போன்ற துறைகளில் உங்களின் மேலான முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம். ஒருவொருக்கொருவர் பரிமாறும் நட்பின் அடிப்படையிலான நல்லுறவின் மூலமாகதான் நாம் வளரமுடியும்.

இந்தியாவில் உள்ள அந்த நல்லுறவை குறிப்பாக தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்திட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். உயர்ந்த மனித வாழ்வியல் நெறியை கொண்ட நாடு அமெரிக்கா. அந்த அடிப்படையோடு, தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு நீங்கள் பங்களிக்க முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழ்நாடும் உங்களை வரவேற்க காத்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் அதிகளவில் நகரமயமாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடுதான். நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் முதல் மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.

* செயற்கை நுண்ணறிவு மையம் மூலம் எதிர்கால வளர்ச்சி…
ஆசிய நாடுகளின் நுழைவு வாயிலான சென்னையில் இருந்துதான் நான் வருகை தந்துள்ளேன். தமிழ்நாடு இன்று உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்று. 39,000க்கும் மேலான தொழிற்சாலைகள், 2.6 மில்லியன் அளவிற்கு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் என்ற அளவில், அகில இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு அதிக அளவில் உள்ளது. மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி மற்றும் ஆடைகள் ஆகிய பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்குகிறது. ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டிலும் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. சேவைகள் ஏற்றுமதியில் இரண்டாமிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே சிறந்து விளங்கும் அறிவுசார் வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும் வகையில், சமீபத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மையம் சமீபத்திலே சென்னையில் துவக்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் இத்துறையின் எதிர்கால வளர்ச்சி மேலும் மேம்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

You may also like

Leave a Comment

6 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi