ஆண்டிபட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அன்புசெல்வம். இவர், ஓ.எல்.எக்ஸ் இணையதளத்தில் குறைந்த விலையில் கார் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்து தூத்துக்குடி மாவட்டம், சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் (37) என்பவர், கடந்த மாதம் 7ம் தேதி அன்புசெல்வத்தை தொடர்பு கொண்டு காரை வாங்க விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து கடந்த மாதம் 11ம் தேதி ஆண்டிபட்டியில் ராஜதானி சாலைக்கு மதன்ராஜை வர வைத்து, அன்புசெல்வத்தின் நண்பர்களான முருகன், ஆனந்த் ஆகியோர் ரூ.9.10 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு காரை கொடுத்துள்ளனர்.
மதன்ராஜ் அந்த காரை தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு ரூ.9.50 லட்சத்துக்கு விற்று விட்டார். இந்நிலையில், கடந்த மாதம் 16ம் தேதி கேரள போலீசார், விக்னேஷ் வாங்கிய கார் திருட்டு வழக்கில் இருப்பதாக கூறி எடுத்து சென்றனர். இதனால் விக்னேஷ், மதன்ராஜிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதுதொடர்பாக மதன்ராஜ் ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து நேற்று மதுரையில் பதுங்கியிருந்த அன்புசெல்வம், அவரது நண்பர்கள் முருகன், ஆனந்த், மாரிமுத்து, முத்துப்பாண்டி, வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர்.