நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு பெய்த கனமழையால் உப்பளங்கள் மழை நீரில் மூழ்கி கடல் போல காட்சியளிக்கின்றன. சுட்டெரித்த கோடை வெயிலுக்கு மத்தியில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் நேற்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
நேற்று அங்கு 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அகஸ்தியன் பள்ளி, கோடியக்காடு, கடினல் வயல் ஆகிய பகுதிகளில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. தொடர் மழையால் சுமார் 9000 ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உப்பளங்களை தார்பாய் கொண்டு உற்பத்தியாளர்கள் மூடி வைத்துள்ளனர். மீண்டும் ஏற்றுமதி பணிகளை தொடங்க 10 நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கோடை மழையால் கடல் போல் உப்பளங்கள் காட்சி அளிக்கின்றன.