ஹைதராபாத்: நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்படும் என்றும் புதிதாக கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானாவில் 3வது நாளாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். பூபாலபள்ளி, பெத்தபள்ளி கரீம்நகர் ஆகிய மாவட்டங்களில் வாக்கு சேகரித்த ராகுல் காந்தி ஜக்தியல் மாவட்டத்தில் வாக்கு வேட்டை நடத்தினார். அங்குள்ள கடை ஒன்றுக்கு சென்ற ராகுல் தோசை சுட்டு வாக்கு சேகரித்தார்.
தெலங்கானாவில் இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்தால் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார். அத்துடன் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் கடந்த 2011ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்படும் என்றார். அத்துடன் புதிதாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் ராகுல் உறுதி அளித்துள்ளார். மஞ்சள் விவசாயிகளுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 12 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை ஆதரவு விலை வழங்கப்படும் என்று ராகுல் காந்தி உறுதி அளித்தார். அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் இருந்து ரூ.500 கூடுதலாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.