ஜெய்ப்பூர்: ‘வயநாடு நிலச்சரிவால் ஏராளமானோர் பலியானதற்கு காரணம் பசுவதையே’ என கூறிய பாஜ மூத்த தலைவர் கியான்தேவ் அஹுஜா, ‘‘பசுக்களை கொல்வதை கேரளா நிறுத்தாவிட்டால் இது மேலும் தொடரும்’’ என பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. ராஜஸ்தானின் முன்னாள் எம்எல்ஏவும், பாஜ மூத்த தலைவருமான கியான்தேவ் அஹுஜா அளித்த பேட்டி ஒன்றில், ‘‘கடந்த 2018ம் ஆண்டிலிருந்து கேரளாவில் நிலச்சரிவுகள், வெள்ளம், நிலநடுக்கம் அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் பசு வதைதான் காரணம். உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்திலும் மழை வெள்ளம், நிலச்சரிவு ஏற்படுகிறது.
ஆனால் அங்கெல்லாம் பாதிப்பு பெரிதாக இல்லை. அதுவே வயநாட்டில் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த பேரழிவுக்கு பசுக்களை கொன்ற பாவம் தான் காரணம். இனியும் கேரளா பசுக்களை கொல்வதை நிறுத்தாவிட்டால் நிலநடுக்கங்களும், நிலச்சரிவுகளும் தொடர்ந்து நடக்கும்’’ என கூறி உள்ளார். ஏற்கனவே இவர் கடந்த 2017ல் பசுக்களை கடத்துபவர்கள் அடித்து கொல்லப்படுவார்கள் என மிரட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.