Tuesday, September 17, 2024
Home » வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் சடலங்களை தேடும் பணி தொடர்கிறது

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் சடலங்களை தேடும் பணி தொடர்கிறது

by Karthik Yash

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 418 ஆக உயர்ந்து உள்ளது. இன்னும் 152 பேரை காணவில்லை. சன்ரைஸ் பள்ளத்தாக்கில் நேற்றும் ராணுவம், சிறப்பு கமாண்டோ வீரர்கள் மற்றும் வனத்துறையினர் மண்ணில் புதைந்து கிடக்கும் சடலங்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ேகரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு நேற்றுடன் 9 நாள் ஆகிறது. இதுவரை 418 பேர் பலியாகி உள்ளனர். 224 உடல்களும், 189 உடல் பாகங்களும் கிடைத்துள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட மேப்பாடி பகுதியில் இருந்து 148 உடல்களும், 28 உடல் பாகங்களும் கிடைத்தன.

சாலியார் ஆறு, நிலம்பூர் வனப்பகுதியில் இருந்து 76 உடல்களும், 161 உடல் பாகங்களும் கிடைத்தன. இன்னும் 152 பேரை காணவில்லை என்பதால் அவர்களது உடல்களை தேடும் பணி நேற்று 9வது நாளாக தொடர்ந்து நடந்தது. சூஜிப்பாறை அருவிக்கு அருகே உள்ள எளிதில் யாராலும் செல்ல முடியாத மிகக்கடினமான பகுதியான சன்ரைஸ் பள்ளத்தாக்கில் நேற்றும் தேடுதல் பணி நடந்தது. ராணுவம், கமாண்டோ வீரர்கள், வனத்துறையினர் உள்பட 12 பேர் நேற்று முன்தினம் ஹெலிகாப்டரில் சென்று 4 கிமீ தொலைவில் பரிசோதனை நடத்தினர். ஆனால் நேற்று உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் ேநற்று மீண்டும் 2 குழுக்கள் ஹெலிகாப்டரில் சென்று தேடினர் . முதலில் 6 பேர் கொண்ட குழுவும், பின்னர் அடுத்த குழுவும் சென்றது. இதில் ராணுவத்தை சேர்ந்த 6 வீரர்களும், சிறப்பு கமாண்டோ வீரர்கள் 4 பேரும், 2 வனத்துறையினரும் உள்ளனர். இவர்கள் சன்ரைஸ் பள்ளத்தாக்கில் உள்ள 6 கிமீ தொலைவில் பரிசோதனை நடத்தினர்.

* அடையாளம் காணப்படாத 226 உடல்கள் அடக்கம்
நிலச்சரிவில் சிக்கிய 226 பேரின் உடல்கள், உடல் பாகங்கள் அடையாளம் காணப்படாமல் இருந்தது. இவற்றை சர்வ மத பிரார்த்தனையுடன் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 3 தினங்களாக அங்குள்ள புத்துமலை பகுதியில் உடல்கள், உடல்பாகங்கள் அடக்கம் செய்யப்பட்டு வந்தது. நேற்றும் புத்துமலையில் 2 உடல்களும் 4 உடல் பாகங்களும் அடக்கம் செய்யப்பட்டன. இதுவரை புத்துமலை மற்றும் கல்பட்டாவில் 46 உடல்கள், 180 உடல் பாகங்கள் என்று 226 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அடையாளம் காணப்படாத உடல்கள் அனைத்தும் டிஎன்ஏ பரிசோதனைக்குப் பிறகு தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

* காணாமல் போனவர்களின் முதல் பட்டியல் வெளியீடு
நிலச்சரிவில் 152 பேர் காணாமல் போயுள்ளதாக கேரள அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. காணாமல் போனவர்களின் முதல் பட்டியலை படங்களுடன் வயநாடு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் காணாமல் போனவர்களின் பெயர், விவரங்கள் ரேஷன் கார்டு எண் உட்பட விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் குறித்து ஏதாவது தகவல் தெரிந்தால் வயநாடு மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் தவிர மேலும் யாராவது காணாமல் போயிருந்தால் அவர்கள் குறித்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

2 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi