பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட கொடிபள்ளம் கிராமத்தில் சிலர் அரசுக்கு சொந்தமான நீர்நிலை மற்றும் வண்டி பாட்டை ஆகியவற்றை ஆக்கிரமித்து, நுழைவாயிலில் வீடுகளை கட்டி உள்ளனர். இதனால் மழைக்காலங்களில் மழை நீர் வெளியேறுவதில் தடை ஏற்பட்டு அருகிலுள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உழவு இயந்திரம் உள்ளிட்ட விவசாய உபகரணங்களை வயல்வெளிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதிவாசிகள், அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து நேற்று பொன்னேரி தாலுகா அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தாசில்தார் மதிவாணன் அளித்த தகவலைத் தொடர்ந்து நிகழ்வு இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அங்கிருந்து அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.