நீர்வளத்துறை சார்பில் 8 மாவட்டங்களில் ரூ.83.19 கோடி செலவில் நிறைவேறிய 19 திட்டப் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: நீர்வளத்துறை சார்பில் 8 மாவட்டங்களில் ரூ.83.19 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள், புனரமைக்கப்பட்ட வாய்க்கால்கள், அணை மறுகட்டுமானப் பணி, புதிய குளம், புதிய அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட 19 நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நீர்வளத்துறையில் 19 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல் என்ற வகையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கவுண்டையன்வலசு கிராமம் அருகில் அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ.11.12 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மாம்பாடி-புங்கந்துறை கிராமம் அமராவதி ஆற்றில் ரூ.11.56 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் கொளப்பாக்கம் கிராமத்தில் கொளப்பாக்கம் கால்வாய் 1 முதல் கொளப்பாக்கம் – பொழிச்சலூர் சாலையில் இணைப்பு ஓடை வரை ரூ.11.72 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூடிய வடிவிலான கால்வாய், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் உள்ளாவூர் கிராமத்தின் அருகே தொள்ளாழி மடுவின் குறுக்கே ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு,

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் இருமரம் கிராமத்தின் அருகே புத்தளிமடுவின் குறுக்கே ரூ.3.6 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஆகியவற்றையும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் கொங்கர்குளம் மற்றும் நூத்துலாபுரம் கிராமம், பாப்பன்குளம் கண்மாய்களுக்கு செங்கட்டான்குளம் கண்மாய் உபரிநீர் வழங்கும் பகிர்மான அணையினை ரூ.1.77 கோடி செலவில் முடிவுற்ற மறுகட்டுமானப் பணி மற்றும் வெள்ளத்தடுப்புச் சுவர், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் கஸ்தூரிரெங்கபுரம் கிராமம் பகுதி 2ல் ரூ.4.84 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளம், திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வெள்ளநீர் சூழ்வதை தடுக்கும் வகையில் திருப்பணிகரிசல்குளம் வெள்ள நீரை ரூ.3.79 கோடி செலவில் முடிவுற்ற நெடுங்குளம், மேகமுடையார் குளம் வழியாக சத்திரம் புதுக்குளம் கண்மாய்க்கு திருப்பும் பணி, பெரம்பலூர் வட்டம் விளாமுத்தூர் கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஆகியவற்றையும்,

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வடக்கிபாளையம் கிராமத்தில் கோதவாடி ஓடையின் குறுக்கே ரூ.2.68 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டம் வடக்கு கல்மேடு கண்மாயில் ரூ.1.46 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணி, தூத்துக்குடி வட்டம் பேரூரணி அணைக்கட்டில் ரூ.1.3 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணி, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் சம்பன்குளம் ஏரியின் வழங்கு வாய்க்காலின் இடது கரையில் ரூ.50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புப் பணிகள், திருச்சி மாவட்டத்தில் ரூ.1.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு கோட்ட தலைமையிட உபகோட்டத்துடன் புதிய அலுவலகக் கட்டடம் என மொத்தம் ரூ.83.19 கோடி செலவில் நீர்வளத்துறை சார்பில் நிறைவேற்றப்பட்ட 19 திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், நீர்வளத்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் மன்மதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு