மதுரை: அரியலூரை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரது 8 வயதான மகள் சிறுநீரக செயல்பாட்டு குறைவு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட்டை தாய் கொடுத்ததால் சிறுமி உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அரியலூர் மாவட்டம் அருகே வசித்து வந்த தீபா, ஆனந்தகுமார் தம்பதிக்கு அகல்யா என்ற பெண்குழந்தையும் மேலும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இரண்டாவது குழந்தை 8 வயதான அகல்யாவிற்கு கடந்த ஆண்டு கிட்னியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாண்டிச்சேரி, ஜிப்மர் மருத்துவமனை, சென்னை அரசு மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 30ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 15 நாட்களாக டயாலிசிஸ் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாலை 5 மணியளவில் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுமிக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் தாயார் தீபா, சிறுமியின் படுக்கை அருகில் இருக்கும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஸ்பிரிட்டை தண்ணீர் என நினைத்து சிறுமிக்கு கொடுத்துள்ளார். இதை பார்த்த செவிலியர் அது தண்ணீர் அல்ல நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஸ்பிரிட் என கூறியதையடுத்து சிறுமி அவசர சிகிச்சை வார்டிற்கு மாற்றம் செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுது நேரத்திலேயே சிறுமி உயிரிழந்துள்ளார். சிறுமி உயிரிழந்தது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.