Tuesday, September 17, 2024
Home » நீர்வரத்து 8ஆயிரம் கனஅடியாக சரிவு; ஒகேனக்கல்லில் 24 நாட்களுக்கு பின் பரிசல் இயக்க அனுமதி: மேட்டூர் அணையில் பாசனத்திற்கு 12ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

நீர்வரத்து 8ஆயிரம் கனஅடியாக சரிவு; ஒகேனக்கல்லில் 24 நாட்களுக்கு பின் பரிசல் இயக்க அனுமதி: மேட்டூர் அணையில் பாசனத்திற்கு 12ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

by MuthuKumar

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இதையடுத்து 24 நாட்களுக்கு பின் அங்கு பரிசல் இயக்க இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்படுகிறது. அணைகளுக்கு நீர்வரத்தை பொறுத்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் உபரிநீர் திறப்பு 10ஆயிரம் கனஅடிக்கும் கீழ் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று 12 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 8 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது.

கடந்த 2 வாரங்களுக்கு முன் கர்நாடக அணைகளில் இருந்து சுமார் 2 லட்சம் கனஅடி அளவிற்கு உபரி நீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஜூலை 16ம்தேதி முதல் ஆற்றில் பரிசல் இயக்கவும் அருவிகளில் குளிக்கவும் மாவட்டநிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் 24 நாட்களுக்கு பின் இன்று முதல் மீண்டும் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக வேலைவாய்ப்பை இழந்த பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். ஆனால் அருவிகளில் குளிப்பதற்கான தடை நீடிக்கிறது. வெள்ளப்பெருக்கின்போது மரக்கிளைகள்,கழிவுகள் அடித்து வரப்பட்டன. இவை அருவி பகுதிகளில் தேங்கி கிடக்கின்றன. மேலும் நடைபாதையும் வெள்ளப்பெருக்கில் சேதம் அடைந்தது. அதனை சரிசெய்யும் பணி மற்றும் கழிவுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனால் வரும் சனிக்கிழமை முதல் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது.

இதேபோல், கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் வரத்து காரணமாக, கடந்த 30ம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதையடுத்து அணையின் இடது கரையில் உள்ள உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தற்போது அணைக்கு நீர்வரத்து சரிந்து வரும் நிலையில் நேற்று 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அணைக்கு நீர்வரத்து இன்று 2வதுநாளாக 10ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை 9மணி முதல் 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சி உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இனி மெல்லமெல்ல குறையும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

twenty − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi