வாஷிங்மெஷின் பராமரிப்பு

நன்றி குங்குமம் தோழி

நம்மில் பல வீடுகளில் கைகளால் துணி துவைக்கும் பழக்கத்தை முற்றிலும் மறந்துவிட்டோம். எல்லோரும் வாஷிங்மெஷின்களை நம்பி வாழ ஆரம்பித்துவிட்டோம். அதிலும் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளையும் சேர்த்து செய்யும் கடினமான சூழலை இந்த வாஷிங்மெஷின்கள் கொஞ்சம் குறைத்துள்ளது என்றே சொல்லலாம். நமக்கு அன்றாடம் உதவக் கூடிய இதனை எவ்வாறு பராமரிக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

* வாஷிங்மெஷினை முதலில் ஒரு நிமிடம் ஓட்டிப் பார்த்து சரியான நிலையில் உள்ளதா என பார்த்த பின் சலவை செய்ய வேண்டும்.

* டேங்க் தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொண்ட பிறகுதான் ஹீட்டரை இயக்க வேண்டும்.

* அதிகமாக நுரை தள்ளும் சோப்புகளை பயன்படுத்தக் கூடாது. நுரை டிரம்புகளில் புகுந்து தொல்லை தரும்.

* அழுக்கு அதிகமாக உள்ள காலர், பாக்கெட், கைப்பகுதிகளில் முதலில் சோப்பை நன்கு தேய்த்து பிறகு வாஷிங்மெஷினில் போடலாம்.

* கனமான பெட்ஷீட்கள், துண்டுகளை சலவை செய்யும் போது மற்ற துணிகளை வெகுவாக குறைத்துவிட வேண்டும். கிழிந்த துணிகளை அப்படியே போட்டால் மேலும் கிழிந்துவிடும்.

* சேலைகளை ஒரு அடி அகலத்துக்கு பல மடங்குகளாக மடக்கி சலவை செய்யவும். ஷர்ட், டிரவுசர் போன்றவற்றை லேசாக மடக்கி, லேசாக முடிந்து பிறகுதான் இயந்திரத்தில் சேர்க்க வேண்டும்.

* சிறு சிறு கர்ச்சீப், ரிப்பன் போன்றவற்றை தலையணை உறைக்குள் போட்டு சலவை செய்யலாம்.

*வெள்ளை துணிகளை கலர் துணிகளோடு கலக்கக் கூடாது. சில்க், நைலான், டெரீன் துணிகளை பிழியாமல் அப்படியே தொங்கவிட்டு தானாகவே தண்ணீர் வடிந்ததும்
காயப் போடலாம்.

* துணிகளை சலவை செய்யும்போது நீலத்தை அதனுடன் கலக்கக் கூடாது. ஏனெனில் இயந்திரத்திலுள்ள மின்சார அமைப்புகள் பாதிப்புக் குள்ளாகி விடும்.

* துணிகளை உள்ளே போடுவதற்கு முன்பும், உள்ளே இருந்து வெளியே எடுப்பதற்கு முன்பும் மின்சார சப்ளை மெயினை ஆப் செய்து விடவும்.

* இயந்திரத்தில் எத்தனை சுற்றுகள் சுற்றலாம் என உள்ளதோ அதைத்தான் செய்ய வேண்டும். மீறினால் மிஷின் பழுதடையும்.

* இயந்திரத்தை உபயோகித்து முடிந்ததும் நன்கு துடைத்து உலரச் செய்ய வேண்டும். மேல் பகுதியில் உள்ள ரப்பர் ரிம்மையும் துடைக்க வேண்டும்.

தொகுப்பு: ச.லெட்சுமி, தென்காசி.

 

Related posts

முகப் பருக்களை தடுக்கும் வழிமுறைகள்!

வெளிநாட்டினர் கொண்டாடும் பிச்வாய் ஓவியங்கள்!

உன்னத உறவுகள்