சென்னை: தமிழ்நாடு அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்ேபாது மமக தலைவர் ஜவாஹிருல்லா எமஎல்ஏ கூறியதாவது: ஒன்றிய பாஜ அரசு மக்களவையில் அறிமுகப்படுத்தி தற்போது நாடாளுமன்றக் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஆய்வில் உள்ள வக்பு திருத்த மசோதா 2024ஐ கண்டித்து மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் வரும் 4ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 4 மணியளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் நடக்கிறது.
இதில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர் மவ்லானா காலித் சைபுல்லா ரஹ்மானி, பொதுச் செயலாளர் பகுலூர் ரஹீம் முஜத்திதி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, மார்க்சிஸ்ட் வெங்கடேசன் எம்.பி. இந்திய கம்யூனிஸ்ட் சுப்பராயன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கே.நவாஸ் கனி எம்பி உள்ளிட்ட எம்பிக்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.