திட்டக்குடி : திட்டக்குடி அடுத்துள்ள கோழியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி கலையரசி (46). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து நடந்து கோழியூர் பஸ் நிறுத்தத்திற்கு சென்றார். அப்போது அவருக்கு பின்னால் மொபட்டில் வந்த இரண்டு வாலிபர்கள் திடீரென கலையரசி அணிந்து இருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை கழுத்திலிருந்து பிடுங்கி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கலையரசி செயினை கையால் இறுக்கி பிடித்துக் கொண்டு நிலைத்தடுமாறு சாலையில் கீழே விழுந்தார். இருந்தபோதிலும் தங்கச் செயினின் பாதியை கொள்ளையர்கள் அறுத்து கொண்டு அங்கிருந்து தப்பித்தனர். கலையரசி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் மொபட்டில் தப்பி சென்றவர்களை மடக்கிப்பிடித்தனர். இதில் ஒருவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.
மற்றொருவரை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திட்டக்குடி போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் அரியலூர் மாவட்டம் வடுகம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சைபிள்ளை மகன் சக்திவேல் (23) என தெரிய வந்தது.
மற்றொருவர் யார் என்று விசாரணை செய்ததில் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. பெண்ணிடம் இருந்து பறிக்கப்பட்ட பாதி செயின் தப்பியோடியவரிடம் உள்ளதும் ெதரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். பட்டப் பகலில் அதிக பொதுமக்கள் நடமாடும் பகுதியில் பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.