திருவண்ணாமலை: கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் லாபகரமாக இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், பால்வளத்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் பேசியதாவது:
மாநிலம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் லாபகரமாக செயல்படும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம். இந்த ஆண்டு உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கப்படும். அதேபோல், பணியாளர்களின் ஊதிய உயர்வுக்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது. ஆவின் மூலம் சர்வதேச தரத்தில் பால் பொருட்களை தருகிறோம். சில்லறை விற்பனையாளர்களின் கமிஷன் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும். பல்வேறு நிர்வாக சீர்திருத்தம் காரணமாக, செலவினம் குறைந்திருக்கிறது. குறிப்பாக, மின்கட்டணம் மாதந்தோறும் ரூ.50 லட்சம் குறைந்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.