சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி, வாக்குப்பதிவு மையங்களில் இன்று காலை முதல் மாலை வரை விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். அலுவலகம் செல்வோர் வசதிக்காக நவம்பர் 4 (இன்று) மற்றும் 5ம் தேதியும், நவம்பர் 18ம் தேதி மற்றும் நவம்பர் 19ம் தேதி ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும். அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 68,154 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் காலை முதல் மாலை வரை நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் இந்த பணிகள் நடைபெறும்.
வருகிற ஜனவரி 1ம் தேதி 18 வயது முடிந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படும். இதேபோன்று 18 வயது முடிந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்கலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தங்கள், இடமாற்றம் செய்யவோ அல்லது ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர், தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து அளிக்கலாம். விண்ணப்பங்களை அலுவலக நாட்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் அளிக்கலாம். . www.voters.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் ‘‘வாக்காளர் உதவி’’ கைபேசி செயலி (Voter Helpline Mobile App) ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.