விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் அண்ணாமலை நேற்று நடைபயணம் மேற்கொண்ட நிலையில் பாஜ கட்சியினரே ‘சங்கிகளின் சங்கமம்’ என பேனர் வைத்து வரவேற்றனர். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டுள்ளளார். அவர் நேற்றைய நடைபயணத்தை தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே கமலாபுரம் பஞ்சாயத்து, சுப்பிரமணியபுரம் விலக்கில் இருந்து துவங்கினார்.
இதையொட்டி விளாத்திகுளம் பஸ் நிலையம் முன் பாஜவினர் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் ‘சங்கிகளின் சங்கமம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே எதிர்க்கட்சியினர் பாஜவினரை சங்கிகள் என்று விமர்சித்து வரும் நிலையில் சங்கிகளின் சங்கமம் என்று கட்சியினரே பேனர் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
விளாத்திகுளம் பஸ் நிலையம் முன் அண்ணாமலை பேசுகையில் ‘‘தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்துக்கு பிரதமர் புதிய ராக்கெட் ஏவுதளம் வழங்கி உள்ளார். அத்துடன் இதை சிறந்த சுற்றுலாதலமாக மாற்றுவோம் என ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான ஏராளமான தொழிற்சாலைகள் அமையும்\” என்றார். முன்னதாக எட்டயபுரம் வந்த அண்ணாமலை, பாரதியார் இல்லத்துக்கு சென்று பாரதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.