விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பா? திருமாவளவன் நேரில் வந்து கூப்பிட்டால் எடப்பாடி அதுபற்றி முடிவெடுப்பார்: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அண்ணாவின் 116வது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், பொன்னையன், ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, தம்பித்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், ‘‘திருமாவளவன் பொதுநல நோக்கத்தோடு மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறோம் என்று சொல்லி இருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. ஆனால் அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம். எனவே எங்கள் கட்சிக்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது. எனவே நேரடியாக சந்தித்து, இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தால் அதுபற்றி பொதுச்செயலாளர் முடிவு செய்வார்.

மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை என்பது மக்கள் பிரச்னைகளுக்காக போராடுவது. தற்போது அந்த கட்சியினர் போராடுவதையே மறந்துவிட்டனர்’’ என்றார். தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் 50வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. சென்னை மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுநர்களில் மூத்த உறுப்பினர்கள் 50 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

Related posts

மணல்மேடு முட்டம் பாலத்துக்கு இணைப்பு சாலை அமைப்பது எப்போது?.. வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

கருங்கல் அருகே இன்று கன்டெய்னர் லாரி சிறை பிடிப்பு: பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு

ரவுடி சீசிங் ராஜா குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம்: தாம்பரம் போலீசார்