சென்னை: தமிழ்நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு இயக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் தவறாமல் பங்கேற்று கையெழுத்திட வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் X தள பதிவில்; ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை சிதைக்கும் நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்கக் கோரி ‘நீட் விலக்கு நம் இலக்கு’ 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் என திமுக இளைஞர்அணி, மாணவர்அணி, மருத்துவர் அணி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு கோரி இன்று அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்தார் அமைச்சர் அன்பு இளவல் உதயநிதி ஸ்டாலின்.
குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய அஞ்சல் அட்டையில் கையெழுத்திட்டு எமது ஆதரவை நல்கினோம். கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை நிலைய செயலாளர்கள், சென்னை மாவட்ட செயலாளர்கள், மற்றும் பிற முன்னணி பொறுப்பாளர்கள் என பலரும் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றோம். தமிழ்நாடு முழுவதும் இவ்வியக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் தவறாமல் பங்கேற்று கையெழுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.