விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் சிவி சண்முகம் எம்பி நேற்று எஸ்பி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள மது ஒழிப்பு மாநாட்டில் நான் அதிமுக சார்பில் கலந்து கொண்டு, சூளுரைக்கப் போவதாகக் கூறி சில கருத்துக்களை பேஸ்புக், எக்ஸ், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.இது முழுக்க முழுக்க தவறான, பொய்யான தகவலாகும். திட்டமிட்டே என் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்றே இதுபோன்ற குற்றச் செயல்களை செய்துள்ளனர். இந்த பொய்யான செய்திகளை சமூகவலைதளங்களில் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.