சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையில், தமிழக அரசின் துறை வாரியான செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், மானிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை தொடங்கியது. முதல் நாளான இன்று, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.எம்.வீரப்பன், இந்திரகுமாரி, மறைந்த எம்எல்ஏ புகழேந்தி உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. குவைத் நாட்டின் மங்கப் பகுதியில் 7 மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கும் பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.மேலும் கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்தவர்கள் 35 பேர் உயிரிழந்தனர்.
இவர்களுக்கும் தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பை வாசித்தார். இது தொடர்பாக சபாநாயகர் பேசுகையில், “துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். விஷச் சாராய விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டோருக்கு உடனே சிகிச்சை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்,”இவ்வாறு தெரிவித்தார். பின்னர் சட்டப்பேரவை நிகழ்வுகள் நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் என்றும் அப்பாவு அறிவித்தார். இதனிடையே கள்ளக்குறிச்சி மற்றும் மாஞ்சோலை விவகாரங்கள் பற்றி பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடிதம் வழங்கியுள்ளன.