விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் இறந்த கோவிந்தராஜ் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் குருமூர்த்தி என்பவருக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். 100% தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குருமூர்த்திக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ஆணையிட்டார்.

மேலும் வெளியான அறிக்கையில்; “விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், செவல்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (19-9-2024) காலை சுமார் 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம் அப்பையநாயக்கன்பட்டி கிராமம், ஆகாஷ் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 27) த/பெ. கணேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் நூறு சதவீத தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்றுவரும் குருமூர்த்தி (வயது 19) த/பெ. பாண்டி என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 இலட்சம் ரூபாயும், நூறு சதவீத தீக்காயத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவரும் குருமூர்த்தி என்பவருக்கு 2 இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரியானா பா.ஜ தேர்தல் அறிக்கை பெண்களுக்கு மாதம் ரூ.2100 மாணவிகளுக்கு ஸ்கூட்டர்

நிழல் உலக தாதா பெயரை சொல்லி சல்மான்கான் தந்தையை மிரட்டிய பெண் கைது

பெண் டாக்டர் பலாத்காரம் கொல்கத்தா மாஜி முதல்வரின் மருத்துவ பதிவு ரத்து