விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முடங்கியாற்று பாலத்தில் அடையாளம் தெரியாத ஆண் தலை மீட்பு..!!


விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முடங்கியாற்று பாலத்தில் அடையாளம் தெரியாத ஆண் தலை மீட்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அய்யனார் கோயில் சாலையில் முடங்கியாற்றுப் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக ஏராளமான பொதுமக்கள் நடந்து செல்வர்.

வழக்கம் போல் பொதுமக்கள் இன்று காலை செல்லும் போது பாலத்தின் பக்கவாட்டு சுவரில் அடையாளம் தெரியாத ஆண் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அந்த பகுதிக்கு சென்று துண்டிக்கப்பட்ட தலையை மீட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் அந்த தலையின் பாகத்தை வைத்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் காவலாளி பூவையா என்பது தெரியவந்தது. அவரை முன்விரோதம் காரணமாக சிலர் கொலை செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இத்தகைய தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக முதற்கட்டமாக 3 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

திமுக பவளவிழா பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துரை

புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது

ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது