இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
கடந்த சில தினங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் மற்றும் வட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம், நவமால்மருதூர் ஊராட்சி லெனின் நகர் பகுதியில் அசுத்தமான குடிநீரை அருந்தியதால், அப்பகுதியை சேர்ந்த மற்றும் அங்கு நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொள்ள வெளியூரிலிருந்து வருகை புரிந்திருந்தவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த கடலூர் மாவட்டம், செல்வன்குப்பம் பகுதியைச் சேர்ந்த சியாமளா, க/பெ. சுப்பையா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த சியாமளா அவர்களின் கணவர் மற்றும் குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்திரவிட்டுள்ளேன்.